‘தர்மேந்திர பிரதான் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்’

 திமுக எம்.பி. கனிமொழி
திமுக எம்.பி. கனிமொழி
Published on

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் மக்களவையில் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என திமுக எம்.பி. கனிமொழி கூறியுள்ளார்.

நாடாளுமன்ற பட்ஜெட் தொடரின் 2-வது பகுதி நேற்று தொடங்கியது. இதில் மும்மொழிக் கொள்கை பிரச்சினை புயலை கிளப்பியது. திமுக எம்.பி.க்கள்-மத்திய கல்வி அமைச்சர் இடையே விவாதம் நடந்தது. அப்போது திமுக எம்.பி.க்கள் நேர்மையாக இல்லை. ஜனநாயகத்துக்கு எதிராக இருக்கிறார்கள். நாகரிகமற்றவர்கள் என்று தர்மேந்திர பிரதான் விமர்சித்தார். இவரின் பேச்சிக்கு கண்டனம் தெரிவித்து திமுக மற்றும் கூட்டணி கட்சி எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கருப்பு உடை அணிந்து, பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அதன்பின் திமுக எம்.பி.கனிமொழி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:

தர்மேந்திர பிரதானின் பேச்சு தமிழர்களின் உணர்வுகளை புண்படுத்தியுள்ளது. மத்திய கல்வி அமைச்சரை நாங்கள் சந்தித்தபோது, புதிய கல்விக் கொள்கையை முழுமையாக ஏற்றுக் கொள்கிறோம் என்று வாக்குறுதி அளித்ததாக தர்மேந்திர பிரதான் பொய் பிரச்சாரம் செய்கிறார். முற்றிலும் இதில் உண்மையில்லை.

தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய நிதியை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது. தமிழ்நாட்டு குழந்தைகளின் எதிர்காலத்தை நாசமாக்குகிறார்கள். தமிழ்நாட்டு குழந்தைகளுக்கு வர வேண்டிய நிதியை நிறுத்தி வைக்க மத்திய அரசுக்கு உரிமை இல்லை. இது முற்றிலும் ஜனநாயக விரோதமானது.

மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசியதை அவைக்குறிப்பில் இருந்து நீக்கினால் போதாது. அவர் அவையில் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். பிரதானுக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ் வழங்கியுள்ளோம். அதை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள சபாநாயகரை வலியுறுத்துவோம். இவ்வாறு அவர் கூறினார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com