25-வது திருமணநாளையொட்டி, பழநி முருகன் கோயிலில் மொட்டை அடித்து நடிகரும், இயக்குநருமான சுந்தர்.சி, குடும்பத்துடன் இன்று காலை சுவாமி தரிசனம் செய்தார்.
நடிகரும், இயக்குநருமான சுந்தர்.சி, நடிகை குஷ்பூ தம்பதியினர் 25-வது திருமண நாளையொட்டி, பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 9) காலை குடும்பத்துடன் வந்தனர். முன்னதாக, பழநி அடிவாரத்தில் சுந்தர்.சி, மொட்டை அடித்து தனது நேர்த்திக்கடனை செலுத்தினார்.
பின்னர், தனது குடும்பத்துடன் அடிவாரத்தில் இருந்து மின் இழுவை ரயில் (வின்ச்) மூலம் மலைக்கோயிலுக்கு சென்றார். அங்கு, விளா பூஜையில் கலந்து கொண்டு, சந்நியாசி அலங்காரத்தில் இருந்த தண்டாயுதபாணியை தரிசனம் செய்தார். அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது.
பின்னர், தங்களது 25-வது திருமணநாளையொட்டி, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குவதற்காக ரூ.1 லட்சம் நன்கொடை வழங்கினார். மலைக்கோயிலில் உள்ள கைலாசநாதர், ஆனந்த விநாயகர் சந்நிதி, போகர் ஜீவ சாமதி ஆகிய இடங்களுக்கும் சென்று சுவாமி தரிசனம் செய்தார். கோயிலுக்கு வந்த பக்தரக்ளுடன் இயக்குநர் சுந்தர்.சி மற்றும் நடிகை குஷ்பூ புகைப்படம் எடுத்துக் கொண்டனர். பின்னர், வின்ச் ரயில் மூலம் அடிவாரத்துக்கு வந்து, காரில் புறப்பட்டு சென்றனர்.