‘ஈ.சி.ஆர். சார்கள் பற்றி என்ன சொல்லப்போகிறார் ஸ்டாலின்’

Edappadi K. Palaniswami
எடப்பாடி பழனிசாமி
Published on

யார் அந்த சார் என்ற நீதிக்கான கேள்விக்கு எரிச்சல் அடைந்த ஸ்டாலின், ஈ.சி.ஆர். சம்பவத்தில் ஈடுபட்டுள்ள சார்கள் பற்றி என்ன சொல்லப் போகிறார் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பி உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்:

“சென்னை ஈ.சி.ஆர். சாலையில், காரில் சென்ற பெண்களை தி.மு.க. கொடி பொருத்திய காரில் வந்த சிலர், சாலையின் நடுவில் மறித்து, அப்பெண்களை அச்சுறுத்தும் வகையில், சினிமா காட்சிகளைக் காட்டிலும் கொடூரமான முறையில் தாக்குதல் நடத்த முயன்ற காட்சி நெஞ்சை பதைக்க வைக்கிறது.

அவர்களிடம் இருந்து தப்பித்த பெண்களை வீடு வரை துரத்தி வந்த கயவர்கள், வீட்டில் இருந்த உறவினர்களும் அக்கம் பக்கத்தினரும் கூடியதால் அங்கிருந்து சென்றதாகவும், இது குறித்து புகாரளித்தால் 'இரவு நேரத்தில் உங்களை யார் வெளியே போகச்சொன்னது' என்று காவல்துறையினர் கேட்டதாகவும் பாதிக்கப்பட்டோர் தரப்பில் கூறுகின்றனர்.

பெண்கள் இரவு நேரத்தில் நடமாடும் சுதந்திர உரிமை கூட ஸ்டாலின் மாடல் தி.மு.க. ஆட்சியில் பறிக்கப்பட்டிருக்கிறதா? பெண்களுக்கு எதிரான குற்றங்களை மேற்கொள்ள தி.மு.க. கொடி உள்ளிட்ட ஆளுங்கட்சி அடையாளம் என்பது லைசன்சா?

குற்றம் செய்பவர்கள் தி.மு.க.வினர் என்றால் காவல்துறை ஆமை வேகத்தில், காலம் தாழ்ந்து தான் செயல்படுமா? யார் அந்த SIR என்ற நீதிக்கான கேள்விக்கு எரிச்சல் அடைந்த ஸ்டாலின், இந்த SIR-கள் பற்றி என்ன சொல்லப் போகிறார்?

மாநிலத்தின் பிரதான சாலையான ஈசிஆரில், பெண்களை இப்படி கொடூரமாக வழிமறித்து தைரியமாக தாக்க முயலும் அளவிற்கு தமிழகத்தின் சட்டம் ஒழுங்கை அடியோடு கெடுத்துள்ள இந்த ஸ்டாலின் மாடல் தி.மு.க. அரசுக்கு எனது கடும் கண்டனம்.

இந்த வழக்கில், நேர்மையாக FIR பதிந்து, பாதிக்கப்பட்டோர் விவரம் லீக் ஆகாததை உறுதி செய்து, அரசியல் தலையீடு இல்லாமல் இக்குற்றத்தில் தொடர்புள்ள அனைவரையும் கைது செய்து, உரிய சட்ட நடவடிக்கை எடுக்குமாறு ஸ்டாலின் மாடல் தி.மு.க. அரசை வலியுறுத்துகிறேன்.” இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com