அமைச்சர் செந்தில் பாலாஜி
அமைச்சர் செந்தில் பாலாஜி

அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத்துறை விடிய விடிய விசாரணை!

அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் நேற்றிரவு விடிய விடிய விசாரணை நடத்தப்பட்ட நிலையில், இன்றும் அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

அமைச்சர் செந்தில் பாலாஜியை சட்டவிரோத பண பரிவர்த்தனை தடை சட்டத்தின்கீழ் அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த ஜூன் 14ஆம் தேதி கைது செய்தனர். பின்னர் அவருக்கு பைபாஸ் இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

இந்த விசாரணையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் நேற்று உச்ச நீதிமன்ற தீர்ப்பு வழங்கியது. அந்தத் தீர்ப்பில், அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை கைது செய்தது சட்டப்பூர்வமானது என்பதால், இந்த கைது நடவடிக்கை செல்லும் எனத் தெரிவித்தது.

உச்ச நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து, செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கக்கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

நீதிபதி எஸ்.அல்லி முன்பு இந்த மனு விசாரணைக்கு வந்த நிலையில், ஆகஸ்ட் 12ஆம் தேதி வரை செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத் துறைக்கு அனுமதியளித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனையடுத்து புழல் சிறைக்கு விரைந்த அமலாகத்துறையினர். பலத்த பாதுகாப்புடன் அமைச்சர் செந்தில் பாலாஜியை நுங்கம்பாக்கம் சாஸ்திரிபவனில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்துக்கு அழைத்து சென்றனர்.

இதனைத் தொடர்ந்து, அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் விடிய விடிய விசாரணை நடந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேவேளையில், அவரது உடல்நிலையைக் கருத்தில் கொண்டு அவருக்கு சிறிது நேரம் ஓய்வெடுக்க அனுமதி வழங்கப்பட்டதாகத் தெரிகிறது. தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் விசாரணை நடைபெற்று வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை ஒட்டி சென்னை சாஸ்திரி பவனில் அமைந்துள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் கேட்க 200 -க்கும் மேற்பட்ட கேள்விகளை அமலகாத்துறை அதிகாரிகள் தயாரித்து வைத்துள்ளதாகவும், ஒவ்வொரு நாளும் 50 கேள்விகள் என்ற அடிப்படையில் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

logo
Andhimazhai
www.andhimazhai.com