திருநெல்வேலி கே.டி.சி.நகரில் ஐ.டி. ஊழியரான கவின் குமார் ஆணவக் கொலை கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள ஆறுமுகமங்கலத்தை சேர்ந்தவர் சந்திரசேகர். விவசாயியான இவருக்கு கவின் குமார் (26) என்ற மகள் உள்ளார். இவர் சென்னையில் உள்ள ஐ.டி. நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறர்.
இந்நிலையில், சமீபத்தில் விடுமுறையில் ஊருக்கு வந்த கவின்குமார், அவரது தாத்தாவுக்கு வைத்தியம் பார்ப்பதற்காக பாளையங்கோட்டை கே.டி.சி. நகர் பகுதியில் உள்ள ஒரு சித்த மருத்துவமனைக்கு மோட்டார் சைக்கிளில் அழைத்து வந்துள்ளார்.
தனது தாத்தாவுக்கு சிகிச்சை அளிக்கும் வரை, அந்த தெருவில் நின்று கொண்டிருந்துள்ளார் கவின்குமார். அங்கு வந்த இளைஞர் ஒருவர் அவரை பைக்கில் அழைத்துச் சென்றுள்ளார். சிறிது நேரத்தில் அந்த தெருவில் வைத்து அவரை அரிவாளால் சரமாரி வெட்டிக்கொலை செய்துவிட்டு, அந்த இளைஞர் அங்கிருந்து தப்பிச்சென்றுவிட்டார்.
தகவல் அறிந்து பாளையங்கோட்டை போலீசார் உயிரிழந்து கிடந்த கவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து, அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்தபோது அதில் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞர் யார் என்பது குறித்த தகவல் கிடைத்தது.
பாளையங்கோட்டை கே.டி.சி.நகர் பகுதியை சேர்ந்த சரவணன் என்பவரது மகன் சுர்ஜித் (24) என்பதும் தெரியவந்துள்ளது. மேலும், சுர்ஜித்தின் தந்தையான சரவணன் ராஜபாளையம் பட்டாலியனிலும், தாயார் கிருஷ்ணகுமாரி மணிமுத்தாறு பட்டாலியனிலும் சப்-இன்ஸ்பெக்டர்களாக பணிபுரிவதும் தெரியவந்தது. இதையடுத்து சுர்ஜித்தை சில மணி நேரம் காவல் நிலையத்தில் வைத்து விசாரித்ததாக கூறப்படுகிறது. மேலும், எதற்காக கொலை செய்தார்? என்பது குறித்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தினர்.
அதில், சித்த மருத்துவரான தன்னுடைய அக்கா வேறு சமூகத்தைச் சேர்ந்த கவின் குமாரை காதலித்ததாகவும் இதை பிடிக்காத காரணத்திலேயே அவரை கொலை செய்ததாகவும் வாக்கு மூலம் கொடுத்துள்ளார்.
இதையடுத்து பாளையங்கோட்டை போலீஸ் நிலையத்தில் சுர்ஜித் மீது கொலை, வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளார்.
இதனிடையே கொலை சம்பவத்திற்கு சுர்ஜித்தின் தாய்-தந்தை தான் காரணம் என்றும், அவர்களையும் இந்த வழக்கில் தூண்டுதலாக செயல்பட்டதாக சேர்க்கவேண்டும் என்றும் பல்வேறு அமைப்பினர் பாதிக்கப்பட்ட கவின் குடும்பத்தினருடன் சென்று புகார் அளித்துள்ளனர். அதன் அடிப்படையிலும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.