சமூக ஆர்வலர் ஜெகபர் அலி
சமூக ஆர்வலர் ஜெகபர் அலி

சமூக ஆர்வலர் ஜெகபர் அலி உடல் தோண்டி எடுக்கும் பணி தொடக்கம்!

Published on

புதுக்கோட்டையில் கொல்லப்பட்ட சமூக ஆர்வலர் ஜெகபர் அலி உடலை தோண்டி எடுக்கும் பணிகள் தொடங்கி உள்ளன.

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் வட்டத்தில், கனிம வளங்கள் கொள்ளை அடிக்கப்படுவதாக புகார் அளித்த சமூக ஆர்வலரும், அ.தி.மு.க. பிரமுகருமான ஜெகபர் அலி அண்மையில் சாலை விபத்தில் பலியானார். அவரது மரணம் விபத்தா அல்லது கொலையா என்ற கேள்விகளும், சர்ச்சைகளும் எழுந்தன.

பின்னர் வழக்கு பதிவு செய்த போலீசார், குற்றச்சாட்டுக்கு ஆளான கிரஷர் நிறுவன உரிமையாளர்கள், லாரி டிரைவர்கள் என மொத்தம் 4 பேரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ஜெகபர் அலி திட்டமிட்டு கொல்லப்பட்டது உறுதி செய்யப்பட்டது.

அவரின் உடல் முறையாக தடயவியல் விதிகளை பின்பற்றி பிரேத பரிசோதனை செய்யப்படவில்லை என்று ஜெகபர் அலி மனைவி மதுரை உயர்நீதிமன்றம் கிளையில் மனு தாக்கல் செய்தார். அதை விசாரித்த நீதிமன்றம், உடலை தோண்டி எடுத்து ஸ்கேன் மற்றும் எக்ஸ்ரே எடுக்க உத்தரவிட்டது.

இந்நிலையில், வக்ப் வாரிய கட்டுப்பாட்டில் உள்ள மயானத்தில் இருந்து உடல் தோண்டி எடுக்கும் நடவடிக்கைகள் தொடங்கி உள்ளன. திருமயம் வட்டாட்சியர் முன்னிலையில், போலீஸ் பாதுகாப்புடன் உடல் தோண்டி எடுக்கப்படும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு உள்ளன.

உடல் தோண்டி எடுத்த பின்னர் எக்ஸ்ரே செய்யப்பட்டு, அந்த படங்கள் இந்த வழக்கின் விசாரணை அமைப்பான சி.பி.சி.ஐ.டி. இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி வசம் ஒப்படைக்கப்படும்.

logo
Andhimazhai
www.andhimazhai.com