திருப்பதி நாராயணன்
திருப்பதி நாராயணன்

ஆளுநர் விவகாரம்: அமைச்சர் உதயநிதியின் பேச்சுக்கு திருப்பதி நாராயணன் கொடுத்த பதிலடி!

ஆளுநரை தரக்குறைவாக பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை அமைச்சரவையிலிருந்து நீக்க வேண்டும் என பாஜக மாநிலத் துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நீட் தேர்வை ரத்து செய்ய மறுக்கும் மத்திய அரசையும் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியையும் கண்டித்து நேற்று திமுகவின் பல்வேறு அணிகள் சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்டு பேசிய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ஆளுநரை மிகக் கடுமையாக கண்டித்துப் பேசினார்.

அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாஜகவின் மாநிலத் துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆளுநருக்கு எவ்வளவு திமிர்? எவ்வளவு கொழுப்பு?.. உங்களுக்கு சவால் விடுகிறேன். தமிழ்நாட்டில் ஏதோவொரு தொகுதியில் போட்டியிடுங்கள், உங்களால் ஜெயிக்க முடியுமா? மக்களை சந்தியுங்கள், உங்கள் சித்தாந்தங்களை தமிழக மக்களிடம் சொல்லுங்கள். "செருப்பை கழட்டி அடிப்பாங்க" என்று தமிழக முதலமைச்சரின் மகனும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பேசியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது மட்டுமல்ல அநாகரீகமான அரசியலும் கூட. செருப்பால் அடிப்பாங்க என்ற சொல் வன்மத்திற்குரியது, சட்டத்திற்கு புறம்பானது. என்று பேசுபவருக்கு தான் திமிர் மற்றும் கொழுப்பு?” என்று உதயநிதியின் பேச்சுகு கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேலும், “ஜெயிக்கவில்லையென்றால் மக்கள் 'செருப்பால் அடிப்பார்கள்' என்று அர்த்தம் என்றால், தி மு க எண்ணற்ற கணக்கான தேர்தல்களில் தோல்வியுற்றது உலகத்திற்கே தெரியும். 1980, 1984,1991 தேர்தல்களில் தோற்ற திமுக-வை தமிழக மக்கள் செருப்பால் அடித்தார்கள் என்றால் ஏற்றுக்கொள்வீர்களா? உங்கள் தந்தை கூட தேர்தலில் போட்டியிட்டு தோல்வியுற்றிருக்கிறார். ஆனால், நீங்கள் கேட்ட கேள்வியை இங்கே கேட்டு உங்கள் அளவிற்கு நான் தரம் தாழ்ந்து பேச மாட்டேன்.

2001, 2011, 2016 தேர்தல்களில் படு தோல்வியடைந்தீர்களே? மக்கள் திமுக -வை செருப்பால் அடித்தார்களா என்று பொருள் கொள்ள வேண்டுமா? 2014ஆம் ஆண்டு மக்களைவை தேர்தலில் மக்கள் திமுகவை செருப்பால் அடித்து புறமுதுகிட்டு ஓடச்செய்தார்கள் என்று ஒப்புக்கொள்கிறீர்களா?

மக்களின் இவ்வளவு செருப்படியையும் பெற்றுக் கொண்டு தொடர்ந்து தி மு க தேர்தல்களில் போட்டியிடுவது கேவலமில்லையா? வெட்கக்கேடு இல்லையா? மானக்கேடு இல்லையா?

ஒரு மாநிலத்தின் அமைச்சர், அதிலும் முதலமைச்சரின் மகன் குடியரத்தலைவரால் நியமிக்கப்பட்ட ஆளுநரை தரம் தாழ்ந்து தரம் கெட்டு 'செருப்பால் அடிப்பாங்க' என்று பேசியிருப்பது கடும் கண்டனத்திற்குரியதோடு, வன்மையாக கண்டிக்கத்தக்கது. முதிர்ச்சியற்ற , அராஜகமான, அநாகரீகமான, மக்களை தூண்டி விடும் முறையில் பேசியுள்ள உதயநீதி ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும். இப்படி தரக்குறைவாக பேசிய அமைச்சரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கண்டிப்பதோடு, அமைச்சரவையிலிருந்து நீக்க வேண்டும்.” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com