பிச்சையோ, கடனோ கேட்கவில்லை; எங்களின் பணத்தைத்தான் கேட்கிறோம்: - உதயநிதி ஸ்டாலின்!

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
Published on

“தமிழகம் ஒருபோதும் மும்மொழியை ஏற்காது. இந்தி திணிப்பைக் கைவிடாவிட்டால் மற்றொரு மொழிப் போரை சந்திக்க தமிழகம் தயங்காது.” என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார்.

மும்மொழிக் கொள்கையை எதிர்த்தும் மத்திய அரசின் மக்கள் விரோதப் போக்கை கண்டித்தும் திமுக கூட்டணிக் கட்சிகள் சார்பில் சென்னையில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், திமுக இளைஞரணி செயலாளரும் துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:

மொழி, கல்வி, நிதி உரிமைக்காக போராட்டம் நடத்துகிறோம். மத்திய பட்ஜெட்டில் தமிழகத்துக்கு ஒரு பைசா கூட ஒதுக்கவில்லை. பேரிடர் நிவாரணத்துக்காக முதல்வர் ரூ.6,675 கோடி கேட்டார். ஆனால் மத்திய அரசு ரூ.950 கோடிதான் தந்தது. அதுவும் தமிழக அரசுக்கு தர வேண்டிய மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்துதான் கொடுத்தார்கள். இந்தியை ஏற்காவிட்டால் கல்வித்துறைக்கு ரூ.2,190 கோடி தரமாட்டோம் என்கின்றனர். இந்த நிதியை உத்தரப்பிரதேசத்துக்கும் குஜராத்துக்கும் பிரித்துக் கொடுத்துள்ளனர்.

மும்மொழி கொள்கையை ஏற்றுக் கொண்டால்தான் நிதியை தருவோம் என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் மிரட்டியுள்ளார். நாங்கள் ஏற்கெனவே சொன்னதுதான் நாங்கள் உங்கள் அப்பன் வீட்டு சொத்தைக் கேட்கவில்லை. பிச்சையோ, கடனோ கேட்கவில்லை. தமிழ்நாட்டு மக்கள் செலுத்திய வரிப்பணம். எங்களின் உரிமையைத்தான் கேட்கிறோம்.

தமிழகத்தை ஒருபோதும் மிரட்டிப் பணியவைக்க முடியாது. தமிழகத்தில் கடைப்பிடிக்கப்படும் இருமொழிக் கொள்கையில் படித்தவர்களில் 99 சதவீதம் பேர் உலகம் முழுவதும் பல்வேறு துறைகளில் பணியாற்றுகின்றனர். இந்தியை அனுமதித்த ராஜஸ்தான் போன்ற மாநிலங்கள் தங்களது தாய்மொழியை இழந்துள்ளன. தமிழகத்தில் அனுமதித்தால் அந்த மாநிலங்களின் நிலைதான் ஏற்படும்.

தமிழகம் ஒருபோதும் மும்மொழியை ஏற்காது. இந்தி திணிப்பைக் கைவிடாவிட்டால் மற்றொரு மொழிப் போரை சந்திக்க தமிழகம் தயங்காது. தங்கள் கட்சிப் பெயரில் அண்ணாவையும், திராவிடத்தையும் வைத்துள்ள அதிமுக எங்களைப் பற்றி அவதூறு பேசாமல், அரசியல் செய்யாமல் மும்மொழிக் கொள்கையை எதிர்த்து தெருவில் வந்து போராட வேண்டும். தமிழகத்துக்கான நிதியைத் தராவிட்டால் இந்த ஆர்ப்பாட்டம் தமிழகம் முழுவதும் போராட்டக் களமாக மாறும். இந்தப் போராட்டம் முடிவுக்கு வருவதும் தொடர்வதும் மத்திய அரசின் கையில்தான் உள்ளது.” இவ்வாறு உதயநிதி பேசினார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com