என்.ஐ.ஏ அதிகாரிகள் அதிகார துஷ்பிரயோகம் செய்தால் தீவிரமாக கருதப்படும்: உயர்நீதிமன்றம் எச்சரிக்கை
தடைசெய்யப்பட்ட பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் நிர்வாகிகள் மீது, ஐஎஸ் அமைப்புக்கு ஆதரவாக செயல்பட்டதாகக் கூறி, தேசிய புலனாய்வு முகமை வழக்குப்பதிவு செய்திருந்தது. இதுதொடர்பாக மேல் விசாரணைக்கு அனுமதிகோரி தேசிய புலனாய்வு முகமை தாக்கல் செய்த மனு நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், இந்த வழக்கில் மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் முகம்மது அப்பாஸ் உள்ளிட்டோர் கைதுசெய்யப்பட்டனர்.
இதையடுத்து தனக்கு எதிரான வழக்கை ரத்துசெய்யக் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் முகம்மது அப்பாஸ் மனுத் தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதிகள் புகழேந்தி, லட்சுமி நாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக ஆஜரானதற்காக வழக்கறிஞர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக முகம்மது அப்பாஸ் தரப்பில் வாதிடப்பட்டது.
இதனைத்தொடர்ந்து, மேல் விசாரணைக்கு அனுமதிகோரி மனுத் தாக்கல்செய்துவிட்டு, அதுதொடர்பாக உத்தரவு பிறப்பிக்கப்படும் முன்பே, அரிவாள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று கூறி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக நீதிபதிகள் குறிப்பிட்டனர். தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அதிகார துஷ்பிரயோகம் செய்தால் தீவிரமாக கருதப்படும் என்றும் எச்சரித்தனர்.
மேலும், மனுவுக்கு பதிலளிக்குமாறு என்ஐஏ தரப்புக்கு உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.