ராஞ்சியில் தமிழக மருத்துவ மாணவர் மர்ம மரணம்!

ராஞ்சியில் தமிழக மருத்துவ மாணவர் மர்ம மரணம்!

ஜார்க்கண்ட் மாநிலம் இராஞ்சியில் தமிழகத்தைச் சேர்ந்த முதுநிலை மருத்துவ மாணவர் மர்மமான முறையில் இறந்துகிடந்தார். மதன்குமார் எனும் அந்த மாணவர் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது. அங்குள்ள ராஜேந்திரா மருத்துவக் கல்வி நிறுவனத்தில் தடயவியல்- நச்சுநீக்கியல் மருத்துவத்தில் முதுநிலை மாணவராக இருந்த அவர், நான்கு மாடிக் கட்டடத்தின் மேற்பகுதியில் உள்ள தளத்தில் தங்கியிருந்தார். இன்று அதிகாலை 5.30 மணிக்கு நண்பர்கள் பார்த்தபோது அவர் தன்னுடைய இடத்தில் இருக்கவில்லை என்பது தெரியவந்தது. காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் வந்து பார்த்தபோது எரிந்த நிலையில் மாணவரின் சடலம் கிடந்துள்ளது. ராஞ்சி முதுநிலை காவல் கண்காணிப்பாளர் சந்தன் குமார் சின்கா, மரணம்தற்கொலையா கொலையா என்பது பற்றி விசாரித்து வருவதாகக் கூறினார். மாணவரின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் அங்கு விரைந்துள்ளனர். இதனிடையே, மாணவரின் மரணம் குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ள மாணவர் அமைப்பு அந்த நிறுவனத்தின் இயக்குநருக்கு உடனடி மனு ஒன்றையும் அளித்துள்ளது.  

logo
Andhimazhai
www.andhimazhai.com