இரயில்வே பார்சல் கிளர்க்காக பணியாற்றியபோது ரூ.100 லஞ்சம் வாங்கியவருக்கு 75 வயதில் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலம் ஹாட்யா இரயில்நிலையத்தில், கடந்த 1995ஆம் ஆண்டு, பார்சல் கிளர்க்காக காளி சங்கர் என்பவர் பணியாற்றி வந்தார். அப்போது ஹாட்யா இரயில்வே நிலையத்திலிருந்து பீகாரில் உள்ள சமஸ்டிபூருக்கு மோட்டார் சைக்கிள் ஒன்றை பார்சல் வழியாக அனுப்ப ரூ.100 லஞ்சம் வாங்கியதாகப் புகார் அளிக்கப்பட்டது.
இதை சி.பி.ஐ. விசாரித்தபோது, தான் லஞ்சம் வாங்கியதாக சங்கர் ஒப்புக்கொண்டார். கடந்த 2004ஆம் ஆண்டு இவரின் குற்றம் நிரூபிக்கப்பட்ட நிலையில், பிணையில் வெளிவந்தார்.
இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றம், லஞ்சம் வாங்கிய குற்றத்திற்காக அவர் கட்டாயம் தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்றும், வயது காரணமாக அவருக்குக் குறைந்தபட்ச தண்டனை விதிக்கப்படும் என்று தெரிவித்தது.
அவரின் பிணையை இரத்துசெய்த உயர்நீதிமன்றம், இரண்டு மாதங்களுக்குள் சரண் அடையவேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.