சிக்கிம் முதல்வர் பிரேம் சிங், அருணாச்சல பிரதேச முதல்வர் பெமா காண்டு
சிக்கிம் முதல்வர் பிரேம் சிங், அருணாச்சல பிரதேச முதல்வர் பெமா காண்டு

அருணாச்சல பிரதேசம், சிக்கிம்: ஆட்சியை தக்கவைத்த ஆளும் கட்சிகள்!

அருணாச்சல பிரதேசத்தில் பா.ஜ.க. மீண்டும் ஆட்சியை தக்கவைத்துள்ளது. அதேபோல், சிக்கிமில் கிராந்திகாரி மோர்ச்சா கட்சி அபார வெற்றிபெற்றுள்ளது.

அருணாச்சல பிரதேசத்தில் மொத்தமுள்ள 60 சட்டசபை தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற்றது. இதில், ஆளும் பா.ஜ.க. 60 தொகுதிகளில் வேட்பாளர்களை களமிறக்கியது. காங்கிரஸ் 19 தொகுதிகளில் மட்டுமே வேட்பாளர்களை களமிறக்கியது. தேசிய மக்கள் கட்சி உள்பட பிற கட்சிகளும் களமிறங்கின.

மேலும், களத்தில் போட்டி வேட்பாளர்கள் இல்லாததால் முதலமைச்சர் பெமா காண்டு உட்பட 10 பா.ஜ.க. வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதனை தொடர்ந்து எஞ்சிய 50 சட்டசபை தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன.

பெரும்பான்மைக்கு 31 தொகுதிகளில் வெற்றிபெற வேண்டும் என்ற நிலையில் ஆளும் பா.ஜ.க. 48 தொகுதிகளை கைப்பற்றி அபார வெற்றிபெற்றது. இதன் மூலம் அருணாச்சல பிரதேசத்தில் பா.ஜ.க. ஆட்சியை தக்கவைத்துள்ளது. தேசிய மக்கள் கட்சி 5 தொகுதிகளை கைப்பற்றியது. பிற கட்சிகள் 7 தொகுதிகளை கைப்பற்றின. காங்கிரஸ் ஒரு தொகுதியிலும் வெற்றிபெறவில்லை.

அருணாச்சல பிரதேசத்தில் 48 தொகுதிகளை கைப்பற்றி பா.ஜ.க. பெரும்பான்மையுடன் வெற்றிபெற்றது. முதலமைச்சராக பெமா காண்டு மீண்டும் பதவியேற்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிக்கிம்

சிக்கிமில் மொத்தமுள்ள 32 சட்டசபை தொகுதிகளுக்கும் கடந்த ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. சிக்கிமில் ஆளும் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா, பா.ஜ.க., சிக்கிம் ஜனநாயக முன்னணி, காங்கிரஸ் உள்பட பல்வேறு கட்சிகள் தேர்தலில் போட்டியிட்டன.

தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. பெரும்பான்மைக்கு 17 தேவை என்ற நிலையில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே ஆளும் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா கட்சி பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலையில் இருந்தது. இறுதியில் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா 31 தொகுதிகளை கைப்பற்றியுள்ளது. சிக்கிம் ஜனநாயக முன்னணி கட்சி 1 தொகுதியை கைப்பற்றியுள்ளது.

இதன் மூலம் 31 தொகுதிகளில் அபார வெற்றிபெற்ற சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா கட்சி சிக்கிமில் மீண்டும் ஆட்சியை தக்கவைத்துள்ளது. ஆட்சியை தக்கவைத்ததன் மூலம் பிரேம் சிங் தமாங் மீண்டும் முதலமைச்சராக பதவியேற்க உள்ளார். சிக்கிமில் கிராந்திகாரி மோர்ச்சா அபார வெற்றிபெற்றதை அக்கட்சியினர் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.

logo
Andhimazhai
www.andhimazhai.com