பெங்களூர் குண்டுவெடிப்பு வழக்கு: பா.ஜ.க. நிர்வாகியிடம் என்.ஐ.ஏ. விசாரணை!
பெங்களூர் குண்டு வெடிப்பு வழக்கில் திடீர்த் திருப்பமாக பா.ஜ.க நிர்வாகி சாய் பிரசாத் என்பவரைக் கைதுசெய்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் கபே உணவகத்தில் கடந்த மார்ச் 1ஆம் தேதி இரண்டு வெடிகுண்டுகள் அடுத்தடுத்து வெடித்துச் சிதறின. இந்தக் குண்டுவெடிப்பில் 9 பேர் காயமடைந்தனர். இந்த வழக்கு தொடர்பாக தற்போது என்.ஐ.ஏ. விசாரித்துவருகிறது. இதுவரை 10-க்கும் மேற்பட்டோரை விசாரணை வளையத்திற்குள் கொண்டுவந்துள்ளது என்.ஐ.ஏ.
உணவகத்தில் குண்டு வைத்துவிட்டு தப்பிச்சென்ற நபரின் சி.சி.டி.வி. காட்சிகளை வெளியிட்டுள்ள விசாரணை அதிகாரிகள், துப்பு கொடுத்தால் ரூ.10 லட்சம் சன்மானம் வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளனர்.
மேலும், இந்த வழக்கு தொடர்பாக ஷிவமோகா, பெல்லாரி சிறைகளிலும் சோதனை நடத்தப்பட்டுள்ளது. இதனிடையே கடந்த சில நாள்களுக்குமுன் ஷிவமோகா பகுதியிலிருந்து இரண்டு பேரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக கைதுசெய்திருந்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்றுவரும் நிலையில், அவர்களின் செல்போன்கள் ஆய்வுசெய்யப்பட்டன.
அப்போது, பா.ஜ.க. நிர்வாகியான சாய் பிரசாத் என்பவர் உடன் இருவரும் அடிக்கடி தொடர்பிலிருந்து வந்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து இன்று சாய் பிரசாத்திடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்திவருகின்றனர். இந்த சம்பவம் கர்நாடகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.