வாட்சாப்பைத் தொடர்ந்து, டெலிகிராம், சிக்னல் செயலிகளில் பயனர் பெயரைப் பயன்படுத்தும் வசதி குறித்து விளக்கம் கேட்டு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
பயனர்களின் தொலைபேசி எண்ணை வெளிப்படுத்தாமல் பயனர் பெயரை மட்டும் உரையாட அனுமதிக்கும் வசதி, சைபர் மோசடி, போலி அடையாளத்தை உருவாக்குதல், டிஜிட்டல் கைது போன்ற இணையக் குற்றங்களுக்கு வழிவகுக்கும் அபாயம் உள்ளதாக மத்திய அரசு குறிப்பிடுகிறது.
வாட்சாப்பில் பயனரின் எண்ணுக்குப் பதிலாக பெயரை வைத்து பயன்படுத்தும் புதிய அம்சத்தை இந்தியாவில் அறிமுகப்படுத்த வாட்சாப் நிறுவனம் அறிவித்திருந்தது.
இதற்கு மத்திய அரசு தற்காலிக தடை விதித்ததுடன், அந்த புதிய அம்சத்திற்கு ஏற்றவாறு கொண்டுவரப்போகும் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து விளக்கம் அளிக்குமாறு மெட்டா நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது .
இதைத் தொடர்ந்து, பயனர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்த விரிவான விளக்கத்தை அளிக்குமாறு டெலிகிராம், சிக்னல் நிறுவனங்களுக்கு மத்திய மின்னணு - தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.