உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம்

தேர்தல் பத்திரம் குறித்த முழு தகவலையும் வெளியிட எஸ்.பி.ஐ.க்கு நீதிமன்றம் உத்தரவு!

தேர்தல் நன்கொடைப் பத்திரங்கள் தொடர்பான அனைத்து தரவுகளையும் மூன்று நாள்களுக்குள் தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தேர்தல் நன்கொடைப் பத்திரங்கள் தொடர்பான அனைத்து தரவுகளையும் 21ஆம் தேதி மாலை 5 மணிக்குள் தேர்தல் ஆணையத்திடம் வழங்கி, உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரத்தை எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்ய வேண்டும் என எஸ்.பி.ஐ. வங்கி மேலாண் இயக்குநருக்கு உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது.

தேர்தல் நன்கொடைப் பத்திரங்கள் வாங்கப்பட்ட தேதி, வாங்கியவரின் பெயர், சீரியல் எண்கள், ஆல்ஃபா நூமரிக் எண்கள் என அனைத்து தரவுகளையும் தாக்கல் செய்ய உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தேர்தல் நன்கொடை பத்திர திட்டம் அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு கடந்த பிப்ரவரி மாதம் 15ஆம் தேதி தீர்ப்பளித்தது. மேலும் இப்பத்திரங்கள் விநியோகம் தொடர்பான விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் பாரத ஸ்டேட் வங்கி சமர்ப்பிக்கவும், அதனை தேர்தல் ஆணையம், தனது வலைதளத்தில் மார்ச் 15ஆம் தேதிக்குள் வெளியிடவும் மார்ச் 11ஆம் தேதி உத்தரவிட்டிருந்தது

தேர்தல் பத்திர வழக்கு இன்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதி சஞ்சீவ் கண்ணா, நீதிபதி பி.ஆர்.கவாய், நீதிபதி ஜே.பி.பார்திவாலா மற்றும் நீதிபதி மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது

அப்போது, தேர்தல் பத்திரங்கள் தொடர்பான எஸ்பிஐ நடவடிக்கை திருப்தி அளிக்கவில்லை என்று உச்ச நீதிமன்றம் கருத்துத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com