
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி தமிழகத்திற்குக் காவிரி நீர் வழங்கப்படும் என்று கர்நாடக முதல்வர் டி.கே. சிவக்குமார் கூறியுள்ளார்.
பெங்களூரில் இதுகுறித்து அவர் பேசுகையில்,
"தமிழ்நாட்டின் நலன், பெங்களூரின் குடிநீர்த் தேவைக்காகவும் மேகதாதுவில் புதிய அணை கட்டத் திட்டமிட்டோம். மேலும், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை நாங்கள் மதிப்போம். ஆதலால், தமிழகத்திற்கு உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி காவிரி நீர் வழங்கப்படும்." என்று கூறினார்.
கடந்த ஆகஸ்ட் 24ஆம் தேதி, தமிழகத்திற்கு விகிதாச்சார அடிப்படையில் தண்ணீர் திறக்கக் கோரும் விவகாரத்தில், காவிரி மேலாண்மை ஆணையத்தை அணுகி முறையிடுமாறு தமிழக அரசை உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது.
மேலும், கர்நாடகம் தமிழகத்திற்குத் திறந்த நீரின் அளவு, பிலிகுண்டுலுவில் வந்துசேர்ந்த நீரின் அளவு குறித்த விரிவான அறிக்கையை வரும் ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படாவிட்டால், தமிழக அரசு மீண்டும் உச்ச நீதிமன்றத்தை நாடலாம் என்று நீதிபதிகள் கூறினர்.
கடந்த ஆகஸ்ட் 25ஆம் தேதி, காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவின் பரிந்துரையை ஏற்று, கர்நாடக அரசு தமிழகத்திற்கு அடுத்த 15 நாள்களுக்கு தினசரி 9,000 கன அடி தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது.
அதைத் தொடர்ந்து, கர்நாடக அரசு நீர்த் திறப்பை 6,000 கன அடியாகக் குறைக்கக் கோரியதையும், தமிழக அரசு 28 டி.எம்.சி தண்ணீர் வழங்கவேண்டும் என்று கோரியதையும் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் ஏற்க மறுத்தது.