மக்களவையில் இன்று அறிமுகம் செய்யப்பட்ட மகளிர் இட ஒதுக்கீட்டு சட்டவரைவு மீதான விவாதத்தில் பிரதமர் மோடியும் பேசினார். அப்போது அவர் எதிர்க்கட்சியினரை இழுத்தும் வேண்டுகோள் விடுத்தும் கவனம் ஈர்த்தார்.
பிரதமர் தன் பேச்சில், “இட ஒதுக்கீடு மசோதா நிறைவேறினால் நான் இதற்கான பெயரை எடுத்துக்கொள்ளப் போவதில்லை; நாளை செய்தித்தாள்களில் முழுப் பக்கத்துக்கு விளம்பரம் தருகிறேன்; யாரெல்லாம் உங்கள் படத்தைப் பதிய விரும்புகிறீர்களோ அவர்களின் படங்களை வெளியிட நான் தயார்.” என்று எதிர்க்கட்சியினரை நோக்கி குறிப்பிட்டார்.
மேலும், தொகுதி மறுவரையறை மசோதாவால் நாட்டின் எந்தப் பகுதியும்- கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு- என சிறிய பெரிய பகுதிகளுக்கு பாதிப்பு ஏற்படாது என்றும் பழைய விகிதமே தொடரப்படும் என்றும் அவர் கூறினார்.
இதுகுறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏற்கெனவே உறுதியளித்ததையும் அவர் சுட்டிக்காட்டினார்.
மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதாவுக்கு அரசியல் சாயம் பூசவேண்டாம் என்றும் மோடி கேட்டுக்கொண்டார்.