டிரோன்
டிரோன் மாதிரி படம்

ஜி-20 தடையை மீறி டிரோன் கேமரா - பிறந்த நாள் குழுவினர் மீது வழக்கு!

புதுடெல்லியில் நடைபெற்றுவரும் ஜி20 மாநாட்டை முன்னிட்டு பாதுகாப்புக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், தடையை மீறி பிறந்தநாள் கொண்டாட்டத்தை டிரோன் கேமராவில் ஒரு குழுவினர் படம்பிடித்தனர். அவர்கள் மீது தலைநகர காவல்துறை வழக்கு பதிந்துள்ளது. 

பட்டேல் நகர் பகுதியில் நிகழ்ந்த இந்த சம்பவம் குறித்து, இந்தியதண்டனைச் சட்டம் 188ஆவது பிரிவின்படி வழக்கு பதியப்பட்டது. அதிகாரிகளின் அறிவிக்கை வெளியிட்ட விதிமுறைகளைக் கடைப்பிடிக்காதவர்கள் மீது நடவடிக்கை எடுக்க இந்தப் பிரிவு வழிசெய்கிறது. 

ஜி20 உச்சி மாநாட்டை முன்னிட்டு டெல்லி நகரிலும் புறநகர்ப் பகுதிகளிலும் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.  இந்த நிலையில், இப்படியொரு சம்பவம் நிகழ்ந்திருப்பதால், டெல்லி காவல்துறையினர் கடும் நடவடிக்கை எடுக்கப்போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர். 

முன்னதாக, வெள்ளி அதிகாலை முதல் மாநாடு முடியும் ஞாயிறு இரவுவரை தலைநகரில் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டது. கடந்த 29ஆம் தேதியன்றே இதுகுறித்து முன்னறிவிப்பு செய்யப்பட்டதுடன், பதில் தாக்குதலிலும் ஈடுபட சிறப்பு வான் தாக்குதல் ஏற்பாடுகளும் செய்யப்பட்டன.

logo
Andhimazhai
www.andhimazhai.com