
மத்திய அரசு தாக்கல்செய்த பொதுத் தேர்வு முறைகேடுகள் தடுப்பு சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது. குரல் வாக்கெடுப்பு மூலம் இந்த மசோதா மக்களவையில் இன்று நிறைவேற்றப்பட்டது.
மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்ட பொதுத் தேர்வு முறைகேடுகள் தடுப்புச் சட்டத் திருத்த மசோதா மீதான விவாதம் பிற்பகல் 2 மணிக்குத் தொடங்கி இரவு 11 மணி வரை நடைபெற்றது.
இன்றும் விவாதம் தொடர்ந்த நிலையில், குரல் வாக்கெடுப்பில் மக்களவை உறுப்பினர்கள் ஒப்புதல் அளித்த நிலையில், இந்த மசோதா நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
இந்த சட்டத் திருத்தத்தின்படி, வினாத்தாள் கசிவு அல்லது தேர்வு முறைகேடுகளில் ஈடுபடும் தனிநபர்களுக்கு குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனையுடன் ரூ. 50 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படும் என்றும்,
முறைகேடு கும்பலால் திட்டமிட்டு அரங்கேற்றப்படும் குற்றங்களுக்கு குறைந்தபட்சம் 7 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையுடன் ரூ. 10 கோடி வரை அபராதமும் விதிக்கப்படும் வகையில் விதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலும், வழக்கு தொடர்பான விசாரணைகளை முடிக்க விரைவு நீதிமன்றங்கள் அமைப்பது உட்பட்ட அம்சங்களும் இடம்பெற்றுள்ளன.