இப்படியா நடக்கணும் என்று பலரும் நொந்துகொள்ளும் சம்பவம் இது. நோயால் அவதியுற்ற தன் மனைவியைப் பார்த்துக் கொள்ள, கணவர் விருப்ப ஓய்வு பெற முடிவெடுத்தார். ஆனாலும் அந்த முடிவால் பலன் இல்லாமல் போய்விட்டது. அந்த விருப்ப ஓய்வு பிரிவு உபசார விழாவின்போதே மனைவி உயிரிழந்துவிட்டார்.
ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நாகரில் வசிப்பவர் தேவேந்திர சந்தல். இவர் மத்திய அரசின் கிடங்கு ஒன்றில் இயக்குநராக பணியாற்றி வந்தார். இவருடைய மனைவி தீபிகா. இவர் பல ஆண்டுகளாக இதய நோயால் அவதியுற்று வந்தார். இந்த தம்பதிகளுக்கு வாரிசு இல்லை என்பதால், மனைவியை உடன் இருந்து பார்த்துக் கொள்வதற்காக சந்தல் விருப்ப ஓய்வு எடுத்துள்ளார். இதற்கான பிரிவு உபசார விழா நேற்று அவரின் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் தீபிகாவும் கலந்து கொண்டார். நிகழ்வுக்கு வந்திருந்த பலரும் தம்பதிகளுக்கு வாழ்த்து தெரிவிக்க, தீபிகா திடீரென மயக்கம் அடைந்து கீழே விழுந்துள்ளார். உடனே அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான வீடியோ சமூக ஊடகத்தில் வைரலாகி வருகிறது. என்னதான் செய்தாலும் விதி வலியது...