மகாராஷ்டிராவின் பால்கர் மாவட்டத்தில் உள்ள கோரே கடற்கரையின் அருகில், நாட்டின் முதல் கடல்சார் விமான நிலையம் அமையவுள்ளது.
இது 9 கோடி பயணிகளைக் கையாளும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.
முழுவதும் நிலத்தில் கட்டப்படும் வழக்கமான விமான நிலையங்களைப் போல் இல்லாமல், கடல்சார் விமான நிலையம் என்பது கடற்கரைக்குத் தொலைவில் உள்ள இடங்களில் அல்லது கடலில் ஏற்படுத்தப்படும் செயற்கைத் தீவுகளில் கட்டப்படுகிறது.
விமான நிலையங்களுக்கு தேவைப்படும் நிலப் பற்றாக்குறைகளைச் சமாளிக்க ஜப்பான், ஹாங்காங், தென் கொரியா போன்ற நாடுகள் இதுபோன்ற கடல்சார் விமான நிலையங்களை வெற்றிகரமாக ஏற்படுத்தியுள்ளது.
இந்த விமான நிலையம் வதவான் துறைமுகம், மும்பை – அகமதாபாத் புல்லட் ரயில், உத்தான்–விரார் கடல் இணைப்புச் சாலை, மும்பை – வடோதரா விரைவுச்சாலை, தேசிய நெடுஞ்சாலை ஆகியவற்றுடன் இணைக்கப்படவுள்ளது.
இதன் மூலம் மும்பை விமான நிலையத்தில் பயணிகள் நெரிசல் குறைவதுடன், சரக்கு போக்குவரத்திற்கேற்ற வசதிகள் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.