மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாரமன்
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாரமன்

மத்திய இடைக்கால பட்ஜெட்: சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாரமன் இன்று மத்திய இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

அவரது பட்ஜெட் உரையில் ஏழைகள், பெண்கள், இளைஞர்கள் விவசாயிகள், ஆகியோர்மீது மத்திய அரசு அதிகம் கவனம் செலுத்துவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், அவர்களுக்காக இதுவரை செயல்படுத்தப்பட்டிருக்கும் திட்டங்களையும் புதிய திட்டங்களையும் விளக்கினார்.

கடந்த பத்து ஆண்டுகளில் மத்திய அரசு 25 கோடி மக்களை பல்வேறு ஏழ்மையிலிருந்து மீட்டுள்ளதாகவும் நிர்மலா சீதாராமன் கூறினார்.

நேரடி வரி வசூல் மூன்று மடங்காக உயர்ந்திருப்பதாகக் கூறிய அவர், இந்த பட்ஜெட்டில் வரி வசூல் சார்ந்து எந்த மாற்றமும் செய்யப்படாது என்றார்.

2024-2025 ஆண்டுக்கான நிதிப் பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 5.1% ஆக இருக்கும் என்றார்.

மேலும் , 2014 வரை நடந்துவந்த ஆட்சியின் முறையற்ற நிர்வாகத்தினையும், 2014 முதல் நடந்துவரும் பா.ஜ.க ஆட்சியின் சாதனைகளையும் ஒப்பிட்டு அடிக்கோடிட்டுக் காட்ட நாடாளுமன்றத்தில் ஒரு வெள்ளையறிக்கை சமர்பிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்:

* நாட்டின் பொருளாதார வளர்ச்சி தொடர்பாக மத்திய அரசு வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யும்.

* ரூ.25,000 வரையிலான வரி தொடர்பான பழைய வழக்குகள் ரத்து செய்யப்படும். இதன்மூலம் 1 கோடி பேர் பயனடைவர்.

* மாநிலங்களுக்கு வழங்கப்படும் 50 ஆண்டுகளுக்கான வட்டி இல்லா கடன் உதவி வழங்கும் திட்டத்தின் மூலம் நடப்பாண்டில் 1.3 லட்சம் கோடி வழங்கப்படும்.

* வேகமாக உயர்ந்து வரும் மக்கள் தொகையால் ஏற்படும் சவால்களை கண்டறிய உயர் அதிகாரிகளை கொண்ட குழு அமைக்கப்படும்.

* மாதாந்திர ஜிஎஸ்டி சராசரி வசூல் ரூ 1.66 லட்சம் கோடியாக உள்ளது.

* ரூ11.75 லட்ச கோடி கடன் வாங்குவதற்கு திட்டம்.

* கார்ப்பரேட் வரி 22% ஆக குறைப்பு.

* வருமான வரி செலுத்துவோர் எண்ணிக்கை 8 கோடிக்கும் மேல் இருக்கிறார்கள். இதன் காரணமாக நாட்டின் நேரடி வரி வருவாய் என்றைக்கும் இல்லாத அளவுக்கு அதிகரிப்பு.

* இந்தியாவில் அந்நிய நேரடி முதலீடு 596 பில்லியன் டாலராக அதிகரிப்பு.

* 10 வருடங்களில் 500 பில்லியன் டாலருக்கு அதிகமாக அந்நிய முதலீடுகள் இந்தியாவுக்கு வந்துள்ளது.

* உள்கட்டமைப்புக்கான செலவு ரூ.11.11 லட்சம் கோடியாக அதிகரிப்பு.

* பெருநகரங்களில் மெட்ரோ ரயில் சேவை விரிவாக்கத்துக்கு முன்னுரிமை.

* மகளிர் தொழில் முனைவோருக்கு 30 கோடி ருத்ரா கடன்கள் வழங்கப்பட்டுள்ளன.

* விமான நிலையங்கள் எண்ணிக்கை இரட்டிப்பாக்கப்படும்.

* கடல் உணவுகளின் ஏற்றுமதி கடந்த 10 ஆண்டுகளில் இரட்டிப்பாகியுள்ளது. 5 மீன்வள பூங்காக்கள் அமைக்கப்படும்.

* கடந்த 10 ஆண்டுகளாக இந்திய பொருளாதாரம் பெரும் பாய்ச்சலில் முன்னேறி வருகிறது.

* அனைவருக்கும் வங்கி கணக்கு, அனைவரும் சமையல் எரிவாயு என்ற நிலையை எட்டியுள்ளோம்.

* 2047இல் புதிய இந்தியாவை படைப்போம்.

* மகளிர் இட ஒதுக்கீடு, முத்தலாக் தடை போன்ற பெண்களுக்கான சட்டங்களை பாஜக அரசு நிறைவேற்றி உள்ளது.

* கொரோனா பெருந்தொற்றை எதிர்கொள்ள உலக நாடுகள் தடுமாறிய நிலையில், இந்தியா சிறப்பாக கையாண்டது.

* ஊழல் எதிர்ப்புக்கும், வாரிசு அரசியலுக்கும் எதிராக நாங்கள் போராடி வருகிறோம். வளர்ச்சியடைந்த இந்தியா என்ற கனவு 2027இல் நனவாகும்.

* பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் கொள்கைகள் மற்றும் நிர்வாகத்தின் மூலம் 2014-க்கு முந்தைய காலகட்டத்தின் ஒவ்வொரு சவாலும் முறியடிக்கப்பட்டது.

* 80 கோடி மக்களுக்கு இலவச ரேஷன் உணவு பொருட்கள் சென்றடைந்துள்ளன.

* கடந்த 10 ஆண்டுகளில் மேல் படிப்பில் சேரும் பெண்களின் எண்ணிக்கை 28% உயர்ந்துள்ளன.

* 10 ஆண்டுகளில் 7 ஐஐடிக்கள், 3,000 புதிய ஐடிஐ, 319 பல்கலைக்கழகங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

* 10 ஆண்டுகளில் நாடு முழுவதும் 19 எய்ம்ஸ் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

* முத்ரா திட்டத்தின் கீழ் 43 கோடி முத்ரா கடன்கள் இதுவரை வழங்கப்பட்டுள்ளன.

* திறன் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 3000 ஐ.டி.ஐக்கள் தொடங்கப்பட்டுள்ளன.

* அடுத்த 5 ஆண்டுகளில் கிராமப்புறங்களில் 2 கோடி வீடுகள் கட்டித்தரப்படும்.

* வீட்டின் மொட்டை மாடியில் சோலார் அமைத்தால் 300 யூனிட் மின்சாரம் இலவசம்.

* நாடு முழுவதும் கூடுதலாக மருத்துவ கல்லூரிகள் அமைப்பது தொடர்பாக குழு அமைக்கப்படும்.

* கருப்பைப் புற்றுநோயைத் தடுக்க 9 முதல் 14 வயதுள்ள பெண்களுக்கு தடுப்பூசி திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.

* ஊட்டச்சத்து குறைபாடுகளை சரிசெய்ய புதிய செயலி அறிமுகம் செய்யப்படும்.

* ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க திட்டங்களை ஊக்குவிக்க ரூ.1 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

* அங்கன்வாடி மற்றும் ஆஷா பணியாளர்களுக்கு ஆயுஷ்மான் பாரத் திட்டம் விரிவுபடுத்தப்படும்.

* பால் உற்பத்தியை அதிகரிக்க புதிய திட்டம் செயல்படுத்தப்படும்.

* நாடு முழுவதும் மின்சார வாகனங்களுக்கான பேட்டரி சார்ஜிங் மையங்கள் அதிகரிக்கப்படும்.

* தொழில்நுப்டம் சார்ந்த ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க திட்டங்களை ஊக்குவிக்க ரூ.1 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

* 40,000 சாதாரண ரயில் பெட்டிகள் வந்தே பாரத் ரயில் பெட்டிகளாக தரம் உயர்த்தப்படும்.

* தொழில் தொடங்க வட்டியில்லாக் கடன் வழங்குவதற்காக ₹1 லட்சம் கோடியில் புதிய நிதியம் அமைக்கப்படும்.

* நடுத்தர வர்க்கத்தினருக்கான வீட்டு வசதி திட்டம் அறிமுகப்படுத்தும்.

* 3 சரக்கு பொருளாதார ரயில்வே வழித்தடம் விரைவில் அமைக்கப்படும்.

* லட்சத்தீவில் சுற்றுலா உட்கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

* 2023-24ல் திருத்தப்பட்ட மதிப்பீட்டின்படி அரசின் செலவு ரூ.44.90 லட்சம் கோடி. திருத்தப்பட்ட வரி வருவாய் மதிப்பீடு ரூ. 27.56 லட்சம் கோடி. நிதி பற்றாக்குறை - 5.8%.

* 2024-25 ஆம் ஆண்டில் நிதிப் பற்றாக்குறை ஜிடிபி-யில் 5.1% ஆக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. 2025-26 ஆம் ஆண்டிற்குள் பற்றாக்குறையை ஜிடிபி-யில் 4.5% ஆகக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

* வருமான வரி விதிப்பு விகிதங்களில் எந்த மாற்றம் இல்லை.

* நேரடி மற்றும் மறைமுக வரி, இறக்குமதி வரி விதிப்பிலும் எந்த மாற்றங்களும் இல்லை.

* கூடுதலாக செலுத்திய வருமான வரி 10 நாட்களில் திருப்பி அளிக்கப்படும்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com