இந்திய சிவில் சர்வீஸ் வரலாற்றிலேயே முதல் முறையாக இது நடந்துள்ளது. ஓர் ஐஆர்எஸ் அதிகாரி தன் பெயர் மற்றும் பாலினத்தை மாற்றிக்கொண்டுள்ளார். அதற்கு மத்திய அரசும் அனுமதி அளித்துள்ளது.
தன் பெயரை எம்.அனுகதிர் சூர்யா எனவும் தான் ஆண் என்றும் பாலினத்தை மாற்றிக்கொண்ட இவர் ஹைதராபாத்தில் உள்ள சுங்கம், கலால், சேவை வரிகள் தீர்ப்பாயத்தில் இணை ஆணையராகப் பணிபுரிகிறார்.
2013 ஆம் ஆண்டு இவர் ஐஆர் எஸ் அதிகாரியாகத் தேர்வானவர். சென்னையில் வருமான வரி உதவி ஆணையராக தன் பணியைத் தொடங்கியவர். இதே அலுவலகத்தில் துணை ஆணையராகவும் பதவி உயர்வு பெற்ற இவர், ஹைதரபாத்துக்கு மாற்றலாகிப் பணிபுரிந்து வருகிறார்.
தமிழ்நாட்டை சேர்ந்த இவர் எம்.ஐடியில் மின்னணுவியலில் பொறியியல் பட்டம் பெற்றுள்ளார். மேற்கொண்டு சைபர் சட்டம், பாரன்சிக்கில் பட்டயப் படிப்பும் முடித்துள்ளார்.
ஒரு பெண் சிவில் சர்வீஸ் அதிகாரி, ஆணாக தன்னை மாற்றிக் கொண்டிருப்பது இதுவே முதல்முறை என்பதால் ஆச்சர்யத்துடன் பார்க்கப்படுகிறது. இதற்கான அனுமதியை மத்திய நிதித்துறை அமைச்சகம், இதற்குப் பொறுப்புள்ள தலைமையின் ஒப்புதலுடன் வழங்கி உள்ளதாக அறிவிக்கை வெளியிட்டுள்ளது.