வீட்டு வேலைகளைச் செய்ய மனைவிக்கு கணவன் கட்டளையிடக்கூடாது என்று கர்நாடக உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பெங்களூரில் வசித்துவரும் ஒருவரை, அவருடைய மனைவிக்கு ஜீவனாம்சம் வழங்குமாறு குடும்பநல நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதை எதிர்த்து அவர் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவை விசாரித்த நீதிபதி சில்லகூர் சுமலதா கூறியதாவது:
“இந்த மனுவைப் பார்க்கும்போது, கணவர் ஒரு முதலாளியைப் போன்றும், மனைவியை வேலையாளைப் போல நடத்தப்பட்டதாகவும் தெரிகிறது.
கணவருக்குத் தெரியாமல் மனைவி பிறந்த வீட்டிற்குச் சென்றதை அவர் மனுவில் குறிப்பிட்டு இருந்தார். இது மனைவியின் விருப்பங்களை கணவர் கட்டுப்படுத்துவதாகத் தெரிகிறது.
வீட்டு வேலைகளைச் செய்யவோ, கணவரின் பெற்றோரைப் பார்த்துக்கொள்ளவோ மனைவியை யாரும் கட்டாயப்படுத்தக்கூடாது. இந்தச் செயல்கள் அனைத்தும், அவரின் விருப்பத்தின் பேரில் செய்யக்கூடியவையே; யாரும் அவரை வற்புறுத்தக்கூடாது.
திருமணத்தில் ஆண், பெண் இருவருக்கும் இடையே ஒரு சமத்துவமான உறவு இருக்க வேண்டும். ஒரு பெண்ணின் சுதந்திரத்தைப் பறிக்க முயலும் அனைத்துச் செயல்பாடுகளும் சமத்துவத்திற்கும், அரசியலமைப்புச் சட்டத்திற்கும் எதிரானவை.
ஜீவனாம்சமாக மனைவி, மகளுக்கு மொத்தமாக ரூ. 9000 கொடுக்க வேண்டும் என்ற குடும்ப நீதிமன்றத்தின் உத்தரவை ரத்துசெய்ய முடியாது.” என்று நீதிபதி தீர்ப்பில் கூறியுள்ளார்.