கேரள குண்டுவெடிப்பு: பலியானோர் எண்ணிக்கை 2-ஆக அதிகரிப்பு!
கேரள மாநிலம் களமசேரியில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் மேலும் ஒருவர் உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை 2ஆக உயர்ந்துள்ளது.
கேரள மாநிலம், எர்ணாகுளம் அருகே களமசேரி பகுதியில் உள்ள கிறிஸ்தவ மத கூட்டரங்கல் இன்று காலை மத வழிபாடு நடைபெற்றுக்கொண்டிருந்தபோது திடீரென அடுத்தடுத்து குண்டு வெடித்தன. இதில் பெண் ஒருவர் பலியானார். 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இதில் 18 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் ஏற்கெனவே ஒருவர் உயிரிழந்த நிலையில், தற்போது மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். அவர் தொடுபுழாவைச் சேர்ந்த குமாரி (வயது 53) என்று தெரியவந்துள்ளது.
குண்டு வெடிப்பு நடந்த இடம் முழுவதும் காவல்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து விசாரிக்க 8 பேர் கொண்ட தேசிய பாதுகாப்புப் படை கேரளத்துக்கு விரைந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் மத்திய உள்துறை அமைச்சர் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார்.
சம்பவ இடத்துக்கு தேசிய புலனாய்வு முகமை, தேசிய பாதுகாப்புப் படை விரைந்து செல்ல அவர் உத்தரவிட்டுள்ளார்.