அதிர்ச்சியூட்டும் சம்பவம்
அதிர்ச்சியூட்டும் சம்பவம்

மனைவிக்கு இன்ஸ்டாகிராமில் அதிக ஃபாலோயர்கள்... கழுத்தை நெரித்து கொன்ற தொழிலதிபர்!

ஆண் பெண் உறவுச் சிக்கலில் சமூக ஊடகங்களின் பங்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை பார்க்க முடிகிறது. இனி வரும் ஆண்டுகளில் சமூக ஊடகங்கள் பல குடும்பங்களின் சிதைவுக்கு மிக முக்கிய காரணமாக இருக்கப் போகிறது என்பதற்கான ஒரு அறிகுறி தான் இந்த சம்பவம்.

உத்தரப்பிரதேச மாநிலம், லக்னோவை சேர்ந்த தொழிலதிபருக்கு திருமணமாகி 12 வயதில் மகளும், 5 வயதில் மகனும் உள்ளனர். இவரின் மனைவி இல்லத்தரசி. அவர், பொழுதுபோக்குக்காக இன்ஸ்டாகிராம் கணக்கு தொடங்கி, அதில் அடிக்கடி ஏதேனும் பதிவேற்றி வந்துள்ளார். இதனால் அவரைப் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

ஒருகட்டத்தில், தொழிலதிபரின் இன்ஸ்டாகிராமை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கையை விட, அவரது மனைவியின் பதிவை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் மனைவி மீது பொறாமை ஏற்பட்டது.மனைவியுடன் அடிக்கடி சண்டையிடத் தொடங்கியுள்ளார்.

அதேபோல், தனது இன்ஸ்டாகிராமில் கணவரின் பக்கத்தை ப்ளாக் செய்துள்ளார். இது கணவருக்கு கோபத்தை அதிகரித்துள்ளது. அதேபோல், தன்னுடைய மனைவி இன்ஸ்டாகிராம் மூலம் யாரிடமோ பழகுகிறார் என்ற சந்தேகம் அவருக்கு வரத் தொடங்கியுள்ளது.

இந்நிலையில் பூர்வாஞ்சல் விரைவு சாலையில் தொழிலதிபரின் கார் ஞாயிற்றுக்கிழமை நின்று கொண்டிருந்தது. இதுகுறித்து தகவல் அறிந்து காவல் துறையினர் விரைந்து சென்றனர். பூட்டப்பட்ட காருக்குள் தொழிலதிபர் அழுது கொண்டிருந்தார். அருகில் அவரது மனைவி இறந்து கிடந்தார். அவர் அருகில் அவரது 2 குழந்தைகள் அழுது கொண்டிருந்தனர்.

இதையடுத்து அவர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது காரில் வரும் போது தனது தாய்க்கும், தந்தைக்கும் தகராறு ஏற்பட்டதாகவும், அதனால் ஆத்திரமடைந்த தந்தை, தாயின் கழுத்தை நெரித்துக் கொன்று விட்டதாக 12 வயது மகள் போலீஸாரிடம் கூறினார். இதையடுத்து கொலை செய்யப்பட்ட இளம்பெண்ணின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீஸார், தொழிலதிபரைப் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த கொலைக்கு இன்ஸ்டாகிராம் கணக்கு தான் பிரச்சினையா? வேறு ஏதும் பிரச்சினையா? என தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் லக்னோவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com