தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு வெளியிட்ட தரவில், நாட்டிலேயே அதிக இளையோர் எச்.ஐ.வி. நோயாளிகள் வாழும் இடமாக கர்நாடகம் உள்ளது.
கர்நாடக மாநிலத்தில் 7000-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்களுக்கு எச்.ஐ.வி. பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதை தொடர்ந்து, கர்நாடக மாநில எய்ட்ஸ் தடுப்பு அமைப்புடன் மாநில அரசும் இணைந்து, அனைத்து கல்லூரிகளிலும் எச்.ஐ.வி. பரிசோதனை நடத்தவும், மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும் முடிவு செய்துள்ளது.
அரசு, அரசு உதவி பெறும், தனியார் கல்லூரிகளில் எய்ட்ஸ் முகாம்கள் அமைத்து, தனிநபரின் அனுமதியுடன் பரிசோதனை நடத்த அறிவுறுத்தியுள்ளது.
தற்போது, கர்நாடகத்தில் 2,60,000 பேர் எச்.ஐ.வி. பாதிப்புடன் வாழ்வதாக தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பின் தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்களில் 2,05,000 பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கல்லூரி மாணவர்களிடையே அண்மையில் எடுக்கப்பட்ட பரிசோதனையில், 18 முதல் 35 வயதிற்குட்பட்ட 7000 கல்லூரி மாணவர்களுக்கு எச்.ஐ.வி. பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
எனவே, கல்வி நிலையங்களிலிருந்தே மாணவர்களுக்கு எச்.ஐ.வி. பாதிப்பு தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தவுள்ளதாக கர்நாடகா அரசு அறிவித்துள்ளது.