நாளை நீட் மறுதேர்வு நடக்கவுள்ள நிலையில், மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரைச் சேர்ந்த மாணவருக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் நகரமான அபுதாபியில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டுள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான சேர்க்கைக்கு நீட் தேர்வு கட்டாயமாக ஆக்கப்பட்டுள்ளது. இதற்கான தேர்வு கடந்த மே 3ஆம் தேதி நடைபெற்றது. அத்தேர்வுக்கான வினாத்தாள் முன்னரே கசிந்ததால், அது இரத்துசெய்யப்பட்டு மறுதேர்வு அறிவிக்கப்பட்டது.
அறிவித்தபடி நாளை (ஜூன் 21) நாடு முழுவதும் நீட் மறுதேர்வு நடக்கவுள்ளது. தமிழகத்தில் 1.42 லட்சம் மாணவர்கள் எழுத உள்ளனர்.
இதற்கான ஹால் டிக்கெட்டை மாணவர்கள் பதிவிறக்கம் செய்து, தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தேர்வு மையத்தைப் பார்த்து வருகின்றனர்.
இந்நிலையில், நாக்பூரைச் சேர்ந்த மாணவர் ஒருவருக்கு அபுதாபியில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டிருந்தது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றொர் தேசிய தேர்வு முகமையிடம் முறையிட்டனர்.
இன்று மாலைக்குள் தேர்வு மையத்தை மாற்றி புது ஹால் டிக்கெட்டை தருவதாக தேசிய தேர்வு முகமை உறுதியளித்தது.
அண்மைத் தகவல்: தற்போது நாக்பூரிலேயே அந்த மாணவருக்கு தேர்வு மையம் ஒதுக்கப்பட்டுள்ளது.