கடந்த மே-3ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வில் நமது மாநிலத்தின் வருகைப்பதிவு 95% இருந்த நிலையில், நேற்று நடந்த மறுதேர்வில் 75% - ஆகக் குறைந்துள்ளது.
நாடு முழுவதும் 22 லட்சம் மாணவர்கள் மே-3ஆம் தேதி நீட் தேர்வை எழுதினர். வினாத்தாள் கசிந்ததாக எழுந்த குற்றச்சாட்டினால், அந்தத் தேர்வு ரத்து செய்யப்பட்டு மறுதேர்வு அறிவிக்கப்பட்டது. மறுதேர்வானது நேற்று நடைபெற்றது.
இதில் சென்னை மண்டலத்தில் அமைக்கப்பட்டிருந்த 43 தேர்வு மையங்களில், 22,115 தேர்வர்கள் எழுத வேண்டிய தேர்வை 17,273 தேர்வர்கள் மட்டுமே எழுதினர்.
நேற்று நடந்த தேர்வில், சென்னை நகரத்தில் உள்ள மையங்களில் 78.1%, காஞ்சிபுரத்தில் 76.5%, செங்கல்பட்டில் 75.1%, திருவள்ளூரில் 75.8% வருகைப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மதுரையில் 14 மையங்களில் நடந்த தேர்வில், 2,181 அதாவது 25% பேர் மறுதேர்வு எழுதவில்லை.
தமிழகம் முழுவதும் மறுதேர்வுக்காக 100க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் பணியில் ஈடுபட்டனர். மேலும், தமிழக போக்குவரத்து கழகம் சிறப்பு பேருந்துகளை இயக்கியது.
அரசுப் பயிற்சி மையங்களில் பயிற்சி பெற்ற 500 தேர்வர்களில் 350 பேர் தேர்வு எழுதியுள்ளதாக அரசுப் பயிற்சி மையங்களின் ஒருங்கிணைப்பாளர் எஸ். வெண்ணிலாதேவி குறிப்பிட்டார்.
மற்ற படிப்புகளில் ஏற்கனவே சேர்க்கை முடிவடைந்த நிலையில், இந்த தேர்வின் நிச்சயமற்ற தன்மையினால் மாணவர்கள் மனஅழுத்தத்திற்கு ஆளானதுடன் மறுதேர்வு எழுத தயக்கம் காட்டியதன் விளைவே மறுதேர்வில் வருகைப்பதிவு குறைந்துள்ளது.
மேலும், மே-3ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வைக் காட்டிலும், மறுதேர்வு கடினமாக இருந்ததாக தேர்வு எழுதிய மாணவர்கள் தெரிவித்தனர்.