பி.எப். தொகை வழங்கும் நடைமுறைகளில் மத்திய அரசு முக்கிய மாற்றங்களை தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய மாற்றம் அண்மையில் நடைமுறைக்கு வந்துள்ளது.
இதன்படி, மொத்தமாக 12 மாத உறுப்பினர் காலம் நிறைவடைந்த பிறகு, தமக்கோ அல்லது குடும்ப உறுப்பினர்களுக்கோ உடல்நலக்குறைவு ஏற்பட்டால் இருப்பில் உள்ள 100% நிதியைத் திரும்பப் பெற வழி ஏற்படுத்தியுள்ளது.
பொதுவாக, மொத்த இருப்பிலிருந்து 75% வரை உடனே பெற்றுக்கொள்ளலாம். கட்டாய குறைந்தபட்ச இருப்புத் தேவை 25% ஆகும். ஒரு வருடம் வேலையில்லாமல் இருந்த பிறகு 100% அதாவது முழுத்தொகையையும் திரும்பப் பெறலாம்.
பங்களிப்பு முந்தைய திட்டத்தைப் போலவே 12% ஆகவும், அறிவிக்கப்பட்ட சில நிறுவனங்களுக்கு 10% ஆகவும் உள்ளது.
மேலும், மாதம் ரூ.15,000 வரை உள்ள ஊதிய வரம்பில் 12% பி.எப். பங்களிப்பு கட்டாயமாக இருக்கும்; அதாவது, ஊழியரும், நிறுவனமும் மாதம் தலா ரூ.1,800 வீதம் கட்டாயமாகச் செலுத்த வேண்டும்.
இதற்கு மேல் செலுத்தப்படும் தொகை அனைத்தும் விருப்பப் பங்களிப்பாக கருதப்படும். கூடுதல் தொகையை நமது விருப்பத்தின் அடிப்படையில் பி.எப். கணக்கில் செலுத்தலாம்.
ஊழியர்கள் சட்டப்பூர்வ வரம்பை மீறி கூடுதல் பங்களிப்பைச் செலுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.