காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தியின் புத்தகத்தை இந்தியாவில் அச்சிட்டு வெளியிடப்போவதில்லை என்று 'பென்குயின் ரேண்டம் ஹவுஸ் இந்தியா' பதிப்பகம் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது.
'பிலாங்கிங் : எ ஜர்னி ஆஃப் லவ்' என்ற தலைப்பில் சோனியா காந்தியின் 544 பக்கங்கள் கொண்ட சுயசரிதைப் புத்தகம் வருகின்ற நவம்பர் 10 அன்று இந்தியா, வெளிநாடுகளில் வெளியாகும் என்று அண்மையில் அறிவிக்கப்பட்டிருந்தது.
'ஆல்ஃபிரட் ஏ. நாஃப்' பதிப்பகத்தால் வெளிநாடுகளில் இந்தப் புத்தகம் வெளியிடப்படவுள்ளது. தமிழகத்தில் 'பென்குயின் ரேண்டம் ஹவுஸ் இந்தயா' பதிப்பகம் வெளியிடும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், சற்று முன்னர் 'பென்குயின்' பதிப்பகம் வெளியிட்டதாவது:
இந்தியாவில் 'பிலாங்கிங்' நூலின் பதிப்பாளர் 'பென்குயின் ரேண்டம் ஹவுஸ் இந்தயா' இல்லை. மேலும், பதிப்பாளர் பரிந்துரைத்த மாற்றங்களைப் புத்தகத்தின் எழுத்தாளர் ஒப்புக்கொள்ளததால், நாங்கள் விலகுவதாகப் பரவிவரும் தகவல்கள் உண்மைக்குப் புறம்பானவை.
ஒரு பதிப்பாளர் என்ற முறையில், உண்மைகளைச் சரிபார்த்து, எழுத்தாளர்களின் புத்தகங்களுக்கு உகந்த பரிந்துரைகளை வழங்குவது எங்களின் பொறுப்பாகும். இது பதிப்புச் செயல்முறையின் ஒரு இயல்பான பகுதி.
அந்தப் புத்தகத்தை வெளியிட நாங்கள் தொடர்ந்து தயாராகவும் ஆர்வமாகவும்தான் இருந்தோம்.
மேலும், அந்தப் புத்தகத்தின் எழுத்தாளருடனான ரகசியமான கலந்துரையாடல்கள் குறித்து நாங்கள் எந்தக் கருத்தும் தெரிவிக்கமாட்டோம் என்று 'பென்குயின் ரேண்டம் ஹவுஸ் இந்தயா' பதிப்பகம் தெரிவித்துள்ளது.
'பென்குயின்' பதிப்பகம் விலகியதைத் தொடர்ந்து, இந்தியாவில் இப்புத்தகத்தை அச்சிட்டு வெளியிட 'ஹார்ப்பர்காலின்ஸ் இந்தியா' பதிப்பகம் பேச்சுவார்த்தை நடத்திவருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.