பெட்ரோல் – டீசல் விலையை உயர்த்திய தனியார் நிறுவனம்… வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!

பெட்ரோல் – டீசல் விலையை உயர்த்திய தனியார் நிறுவனம்… வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!
Published on

ஈரான் – இஸ்ரேல் இடையேயான போர் பதற்றங்களுக்கு மத்தியில், சர்வதேச சந்தையில் நிலவி வரும் கச்சா எண்ணெய் பற்றாக்குறை மற்றும் விலை ஏற்றம் காரணமாக இந்தியாவின் முன்னணி தனியார் நிறுவனமான நயாரா எனர்ஜி (Nayara Energy), பெட்ரோல் மற்றும் டீசல் விலையை அதிரடியாக உயர்த்தியுள்ளது.

கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி முதல் ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் போர் நடவடிக்கைகளைத் தொடங்கின. இதற்குப் பதிலடியாக, இஸ்ரேலுக்கு ஆதரவாகச் செயல்படும் வளைகுடா நாடுகளின் மீது ஈரானும் தாக்குதல்களை நடத்தி வருகிறது.

இதனால், உலகின் மிக முக்கியமான கடல்வழிப் பாதையான ஹார்மூஸ் ஜலசந்தி வழியாக கச்சா எண்ணெய் ஏற்றிச் செல்லும் கப்பல்களின் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. வளைகுடா நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வரும் கச்சா எண்ணெய் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள இந்தத் தடையால், சர்வதேச சந்தையில் ஒரு பேரல் கச்சா எண்ணெயின் விலை 160 டாலர் வரை உயர்ந்துள்ளது.

சர்வதேச விலை உயர்வு ஒருபுறம் இருக்க, நயாரா நிறுவனம் தனது வாடினார் சுத்திகரிப்பு ஆலையை பராமரிப்பு பணிகளுக்காக ஏப்ரல் மாதம் முதல் 35 நாட்களுக்கு மூடப்போவதாக அறிவித்துள்ளது. இந்தச் சூழலில், நயாரா நிறுவனம் தனது சில்லறை விற்பனை நிலையங்களில் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியுள்ளது.

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.5.30 உயர்த்தப்பட்டுள்ளது. டீசல் விலை லிட்டருக்கு ரூ.3.00 உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம், நயாரா பெட்ரோல் பங்குகளில் இன்று முதல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.107.93-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.97.22-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தற்போதைய நிலவரப்படி, இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் போன்ற பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் ரிலையன்ஸ் ஆகிய நிறுவனங்களில் சாதாரண பெட்ரோல், டீசல் விலையில் இதுவரை மாற்றம் செய்யப்படவில்லை. எனினும், சில நாட்களுக்கு முன்பு பொதுத்துறை நிறுவனங்கள் பிரீமியம் ரக பெட்ரோல் விலையை மட்டும் லிட்டருக்கு ரூ.2 வரை உயர்த்தியது குறிப்பிடத்தக்கது.

logo
Andhimazhai
www.andhimazhai.com