வி.கே. பாண்டியன்
வி.கே. பாண்டியன்

பூரி கோவில் சாவி – மோடிக்கு தமிழ் அதிகாரி விளக்கம்!

ஒடிசா ஜெகநாதர் கோவில் சாவி தொலைந்து போனது தொடர்பாக பிரதமர் மோடி கேள்வி எழுப்பியிருந்த நிலையில், அதற்கு முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி வி.கே. பாண்டியன் பதில் அளித்துள்ளார்.

ஒடிசா மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற பூரி ஜெகநாதர் கோவிலில் தொலைந்து போன சாவிகள் தமிழ்நாட்டில் இருப்பதாக பிரதமர் மோடி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பிரதமர் மோடியின் இந்த பேச்சு குறித்து வி.கே. பாண்டியன் பதில் அளித்துள்ளார்.

அதில், “கோவிலின் பொக்கிஷ அறை கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக திறக்கப்படவில்லை. அந்த அறையை ஆய்வு செய்ய ஒடிசா உயர்நீதிமன்றம் கடந்த 2018ஆம் ஆண்டு உத்தரவிட்டது. அதன்படி ஆய்வு செய்தபோதுதான் அறையின் சாவிகள் காணாமல் போனது தெரியவந்தது. நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து ஒடிசா அரசு கடந்த ஆண்டு ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் குழுவை அமைத்தது. அசல் சாவிகள் தொகுப்பு இல்லை என்றாலும், நகல் சாவிகள் உள்ளன. காணாமல் போன சாவிகள் குறித்து இப்போது பேசும் பிரதமர் மோடி, முடிந்தால் அவரே அந்த சாவியைக் கண்டுபிடித்து தரட்டும். கோவில் விழாவையொட்டி பொக்கிஷ அறை திறக்கப்படும். அதற்கான தேதியும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.” என்று பாண்டியன் கூறியுள்ளார்.

தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகரியான வி.கே. பாண்டியன், விருப்ப ஓய்வுக்குப் பின்னர் தற்போது ஒடிசா மாநில அரசில் 5 டி திட்டத்தின் தலைவராகவும் ஆளும் கட்சியில் செல்வாக்குள்ள நபராகவும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

logo
Andhimazhai
www.andhimazhai.com