நீட் தேர்வில் நடைபெற்ற முறைகேடுகளுக்கு அரசு பொறுப்பேற்க வேண்டும், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் உட்பட்ட கோரிக்கைகளை முன்வைத்து கரப்பான் பூச்சி ஜனதா கட்சி மாணவர்கள் டெல்லியில் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
இவர்களுக்கு ஆதரவு அளித்துவரும் மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, கருப்பு பேட்ஜ் அணிந்துவந்து செய்தியாளர்களை இன்று சந்தித்தார்.
செய்தியாளர்களிடம் ராகுல் காந்தி கூறியதாவது,
" இந்தியாவின் விலைமதிப்பற்ற சொத்தாகக் கருதப்படும் கல்வி, இன்று அழிவை நோக்கி பயணித்து வருகிறது. இதுவரை 152 நீட் கேள்வி வினாத்தாள்கள் தேர்வுக்கு முன்னரே வெளியாகியுள்ளன. ஆனால், அது சம்பந்தமாக ஒருவர்கூட கைது செய்யப்படவில்லை. நீட் தொடர்பான குற்றங்கள் அதிகரிப்பதற்கான முக்கிய காரணம் இதுவே ஆகும்.
கல்விக்காக மத்திய அரசு ரூ. 1 லட்சத்து 40 ஆயிரம் கோடி ரூபாய் பட்ஜெட்டில் ஒதுக்குகிறது. ஆனால், நீட் தேர்வுக்கான பயிற்சிக்காக இந்திய குடும்பங்கள் செலவழிக்கும் மொத்த தொகை ரூ. 1 லட்சத்து 32 ஆயிரம் கோடியாகும்.
இளைஞர்கள் நன்கு படித்து வந்தாலும், எந்தத் துறையிலும் அவர்களுக்கேற்ற வேலை கிடைப்பதில்லை. மாணவர்கள் மூன்று கோரிக்கைகளை முன்வைத்துதான் போராடுகிறார்கள்.
முதலில், கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும். இது 100% ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியது. இரண்டாவதாக, இந்தத் தவறுக்கு உடந்தையாகச் செயல்பட்டவர்கள் பொறுப்பேற்க வேண்டும். மூன்றாவதாக, தவறுக்குப் பொறுப்பேற்றவர்கள் மன்னிப்பு கேட்கவேண்டும்." என்று ராகுல் காந்தி கூறினார்.