பழம்பெரும் திரைப்பட நடிகை செளகார் ஜானகி சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 94.
உடல்நலக்குறைவு காரணமாக அண்மையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில், இன்று பிற்பகல் உயிரிழந்தார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியான திரைப்படங்களில் நடித்துள்ள இவர், திரைப்படங்களில் 76 ஆண்டுகளாக இரசிகர்களுடன் பயணித்தவர்.
இவர் 1950ஆம் ஆண்டு நடித்த 'செளகார்' என்ற தெலுங்குப் படத்தில்தான் திரையுலகிற்கு அறிமுகமானார். அதன்மூலம் 'செளகார் ஜானகி' என்ற சிறப்புப் பெயரைப் பெற்றார். 400 திரைப்படங்கள், பல்வேறு மேடை நாடகங்களிலும் நடித்துள்ளார்.
'வளையாபதி' என்ற திரைப்படத்தின் மூலம் 1952ஆம் ஆண்டு, தமிழ்த் திரையுலகில் அடியெடுத்து வைத்தார்.
கடந்த 2020ஆம் ஆண்டில், இவர் தனது 400ஆவது திரைப்படமான 'பிசுகோத்' என்ற தமிழ்த் திரைப்படத்தில் நடித்துள்ளார்.
இரண்டு நந்தி விருதுகள், கலைமாமணி விருது ஆகிய விருதுகளைப் பெற்றுள்ளார்.
இந்திய அரசின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருதை கடந்த 2022ஆம் ஆண்டு பெற்றார்.