சைபர் செக்யூரிட்டி படிப்பில் சேர்க்கவில்லை என்பதற்காக கல்லூரியின் இணையப் பக்கத்தை ஹேக் செய்த மாணவருக்கு, சாதகமான பதிலை வழங்கியுள்ளது ஐ.ஐ.டி. கான்பூர்.
கான்பூர், சென்னை ஐ.ஐ.டி.களில் இளநிலை சைபர் செக்யூரிட்டி படிப்பிற்கான சேர்க்கைக்கு மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
பெறப்பட்ட விண்ணப்பங்களில் தகுதியான மாணவர்களின் பட்டியலை கல்லூரிகளின் இணையதளங்களில் வெளியிடப்பட்டது.
தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டியலில், தனது பெயர் இல்லை என்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த மாணவர், தனது திறமையைக் கல்லூரி நிர்வாகத்திற்கு காட்ட விரும்பினார்.
இதனால், கல்லூரிகளின் இணையதளத்தை ஹேக் செய்த மாணவர், "இணையதளப் பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளது. எனக்கு நியாயமான வாய்ப்பு வேண்டும்." என்று குறிப்பிட்டு இருந்தார்.
இதுகுறித்து பேசிய ஐ.ஐ.டி. கான்பூர் இயக்குநர் மணிந்திர அகர்வால் கூறியதாவது:
"விண்ணப்பித்திருந்த மாணவருக்கு சைபர் செக்யூரிட்டி பிரிவில் அனுபவம் இல்லாததால், அவருடைய விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. நடப்பு ஆண்டு சேர்க்கைக்கான பட்டியல் இறுதியாகிவிட்டதால், இந்த ஆண்டு அவரின் சேர்க்கைக்கு அனுமதி வழங்க முடியாது.
தேர்வுகள் மூலமாக, அவரின் தொழில்நுட்பத் திறமைகள் ஆய்வு செய்யப்படும். அதன் அடிப்படையில், அவருக்கு அடுத்த ஆண்டு சேர்க்கையில் வாய்ப்பு வழங்கப்படும்.
மேலும், இதுபோன்று நிர்வாகத்தின் அனுமதி இல்லாமல், அவர்களின் இணையதளப் பக்கத்தை முடக்குவது சட்டத்திற்குப் புறம்பானது என்று அவருக்கு புரிய வைத்துள்ளோம்." என்று கூறினார்.
முன்னதாக, சி.பி.எஸ்.இ.-ன் இணையதளப் பக்கத்தில் உள்ள பாதுகாப்புக் குறைபாடுகள் குறித்து கண்டுபிடித்த மற்றொரு மாணவருக்கு, கான்பூர் ஐ.ஐ.டி.யில் வேலை கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.