சுச்சரித்தா மொகந்தி, ஒடிசா காங்கிரஸ்
சுச்சரித்தா மொகந்தி, ஒடிசா காங்கிரஸ்

செலவுக்குப் பணமில்லை- எம்.பி. சீட்டு வேண்டாம்... திருப்பித்தந்த காங்கிரஸ் வேட்பாளர்!

எம்.பி. சீட்டுக்காக அவரவர் எம்பி எம்பி வாங்கும் நிலையில், காங்கிரஸ் கட்சியில் ஒருவர் தனக்கு வழங்கப்பட்ட தொகுதி வாய்ப்பே வேண்டாம் என மறுத்து தலைமைக்கு கடிதம் எழுதியிருக்கிறார்.

ஒதிசாவின் புரி மக்களவைத் தொகுதியில் முன்னாள் எம்.பி. பிரஜாமோகன் மொகந்தியின் மகள் சுச்சரிதா மொகந்தி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். முன்னாள் பத்திரிகையாளரான இவர், தந்தையின் வாரிசாக இந்தத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றுவிடுவார் என காங்கிரஸ் மேலிடம் இவரை வேட்பாளராக அறிவித்தது. ஆனால், சுச்சரித்தாவோ தன்னிடம் தேர்தல் வேலைகளுக்கான அளவுக்கு போதிய பணம் இல்லை என்றும், கட்சிதான் செலவை கவனித்துக்கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார். ஆனால் மாநிலத் தலைமையோ சுச்சரித்தாவையே செலவைப் பார்த்துக்கொள்ளுமாறு கூறிவிட்டது.

அதையடுத்து, தனக்கு புரி தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பை மறுத்து கட்சியின் பொதுச்செயலாளர் வேணுகோபாலுக்கு சுச்சரித்தா கடிதம் அனுப்பிவிட்டார்.

அதில், “ மாத சம்பளம் வாங்கும் பத்திரிகையாளராக இருந்தவள், நான். என்னுடைய கையிலிருந்த எல்லாவற்றையும் புரி தேர்தல் பிரச்சாரத்துக்காக செலவிட்டுவிட்டேன். பொது நன்கொடைக்கு முயற்சி செய்தேன். ஆனால் ஒன்றும் பலனளிக்கவில்லை. கட்சியின் நிதி இல்லாவிட்டால் மேற்கொண்டு என்னால் பிரச்சாரம் செய்யமுடியாது. எனவே, எனக்கு வழங்கப்பட்ட வாய்ப்பைத் திரும்ப அளிக்கிறேன்.” என்று சுச்சரித்தா குறிப்பிட்டுள்ளார்.

இந்தத் தொகுதியில் இம்மாதம் 25ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. நாளைமறுநாள் 6ஆம் தேதிக்குள் வேட்புமனுவைத் தாக்கல் செய்யவேண்டும் என்பதால் காங்கிரஸ் கட்சிக்கு இது நெருக்கடியை அளித்துள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com