ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட போலி நீதிமன்றத் தீர்ப்புகள், இல்லாத சட்ட முன்னுதாரணங்களை மேற்கோளாகப் பயன்படுத்தி அளிக்கப்பட்ட உத்தரவுகளை உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
எஸ்ஸல் நிறுவனம் தொடர்பான வழக்கில் தேசிய நிறுவனச் சட்டத் தீர்ப்பாயம் அளித்த உத்தரவு, அதனை உறுதிப்படுத்திய தேசிய நிறுவனச் சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் உத்தரவுகளை உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
இது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதிகள் பி.எஸ். நரசிம்மா, அலோக் ஆராதே அமர்வு, தீர்ப்பில் மேற்கோளாக குறிப்பிடப்பட்ட சில நீதிமன்றத் தீர்ப்புகள் உண்மையில் இல்லாதவை என்றும், அவை ஏஐ உருவாக்கிய பொய்யான சட்ட முன்னுதாரணங்கள் என்றும் கண்டறிந்துள்ளது.
நீதித்துறையில் இதுபோன்ற போலி மேற்கோள்கள் பயன்படுத்தப்படுவது நீதித்துறையின் தூய்மையையும் நம்பகத் தன்மையையும் கடுமையாக பாதிக்கும் என நீதிமன்றம் எச்சரித்துள்ளது.
ஏஐயை ஒரு உதவிக் கருவியாகப் பயன்படுத்தலாம். ஆனால், அது வழங்கும் தகவல்களைச் சரிபார்க்காமல் நீதிமன்றங்களில் அப்படியே பயன்படுத்துவதை ஒருபோதும் உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொள்ளாது என்றும், ஏஐ உருவாக்கிய போலி சட்ட முன்னுதாரணங்கள் இடம்பெற்ற எந்தத் தீர்ப்பும் செல்லுபடியாகாது என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மேலும், ஏஐ பயன்பாட்டுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க நிபுணர் குழுவை அமைக்கவும் இந்திய பார் கவுன்சிலுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.