டாடா சன்ஸ் குழுமத்தின் தலைவராக சந்திரசேகரன் மேலும் 5 ஆண்டுகள் தொடர்வார் என்று டாடா சன்ஸ் குழுமத்தின் நிர்வாகக் குழுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
சந்திரசேகரன் டாடா சன்ஸ் குழுமத்தில் 1987ஆம் ஆண்டு இணைந்தார். பின்னர் 2009ஆம் ஆண்டு, டி.சி.எஸ்.-ன் தலைமை நிர்வாகியாக ஆனார்.
கடந்த 2017ஆம் ஆண்டு முதல், டாடா குழுமத்தின் தலைவராக சந்திரசேகரன் இருந்துவருகிறார்.
இவரின் பதவிக்காலம் வருகின்ற 2027ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்துடன் முடிவடையவுள்ள நிலையில், பதவி நீட்டிப்புக்கு நிர்வாகிகள் சிலர் எதிர்ப்பு தெரிவித்ததால், பதவிவிலகப் போவதாக கடந்த மாதம் சந்திரசேகரன் தெரிவித்தார்.
இந்நிலையில், இன்று நடைபெற்ற டாடா சன்ஸ் குழுமத்தின் நிர்வாகக் கூட்டத்தில், டாடா சன்ஸ் குழுமத்தின் தலைவராக சந்திரசேகரன், மேலும் 5 ஆண்டுகள் தொடர்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, வரும் 2027ஆம் ஆண்டிற்குப் பிறகு தனது பதவிக்காலத்தை நீட்டிக்க வேண்டாம் என்ற முடிவை எடுத்துள்ளதாகவும், டாடா சன்ஸ் குழுவின் வாரியத்திடம் இந்த முடிவை முன்னதாகவே தெரிவித்துள்ளதாகவும் சந்திரசேகரன் கடந்த மாதம் குறிப்பிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.