இங்கிலாந்தைச் சேர்ந்த 9 பல்கலைக்கழகங்கள் இந்தியாவில் திறக்கப்படும் என அந்நாட்டு பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் உடனான சந்திப்புக்குப்பின் பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
இங்கிலாந்து பிரதமர் கீர் ஸ்டார்மர் இரண்டு நாள் (அக். 8, 9) சுற்றுப்பயணமாக இந்தியா வந்துள்ளார். அவருடன் இங்கிலாந்தைச் சேர்ந்த தொழிலதிபர்கள், தொழில்முனைவோர்,பல்கலைக்கழக துணைவேந்தர்கள் உள்ளிட்ட 125 பேர் அடங்கிய குழுவினரும் வருகை தந்துள்ளனர்.
இன்று மும்பையில் ஸ்டார்மரை பிரதமர் மோடி சந்தித்துப் பேசினார். அப்போது, இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், இங்கிலாந்தைச் சேர்ந்த 9 பல்கலைக்கழகங்கள் இந்தியாவில் திறக்கப்படும் என இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் உடனான சந்திப்புக்குப்பின் பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
ஏற்கெனவே குருகிராமில் சவுத்தாம்ப்டன் பல்கலைகழக்கத்தின் வளாகம் திறக்கப்பட்டுள்ளது. லிவர்பூல் பல்கலைக்கழகம் பெங்களூரிலும், யார்க் பல்கலைக்கழகம், அபெர்டீன் பல்கலைக்கழகம் மும்பையும் திறக்கப்பட உள்ளன.
பிரிஸ்டல் பல்கலைக்கழகம் மும்பையில் தனது வளாகத்தை அடுத்த ஆண்டு மே மாதம் திறக்க உள்ளது. அதற்கான ஒப்புதலையும் பல்கலைக்கழக மானியக் குழுவிடமிருந்து பெற்றுள்ளது.
மேலும், சில பல்கலைக்கழகங்களின் வளாகங்கள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் திறக்கப்பட உள்ளன.
இந்திய மாணவர்கள் வெளிநாடுகளுக்கு செல்லாமல், உலகத்தரம் வாய்ந்த கல்வியை இங்கேயே பயில்வதற்கான வழிவகை செய்கிறது தேசிய கல்விக் கொள்கை 2020. இதில் உள்ள அம்சங்களை மத்திய அரசு கொஞ்சம் கொஞ்சமாக நடைமுறைப் படுத்தி வருகிறது.