உங்கள் வாக்கு யாருக்கு...? சிந்தித்து வாக்களியுங்கள் மக்களே! – ராகுல் வேண்டுகோள்!
நாட்டு மக்கள் அனைவரும் வாக்களிப்பதற்கு முன் சிந்தித்து வாக்களியுங்கள் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு தேதி நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பிலும் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில் இந்தியா கூட்டணியின் வெற்றியை உறுதி செய்யுமாறு அதன் முக்கிய தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்தி தனது எக்ஸ் தளம் மூலம் வாக்களர்களுக்கு வேண்டுகோள் விடுத்து உள்ளார். அதில் அவர் பதிவிட்டுள்ளதாவது:
"இந்தியா தற்போது மிகவும் முக்கியமான தருணத்தில் இருக்கிறது. நாட்டை கட்டி எழுப்பியவர்கள் யார்? சீரழித்தவர்கள் யார்? என்பதை சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினரும் புரிந்து கொள்ள வேண்டும்.
இளைஞர்களுக்கு வேலை உறுதி, விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை உத்தரவாதம், ஒவ்வொரு ஏழைப் பெண்ணும் கோடீசுவரர், தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கு குறைந்தபட்சம் ரூ.400, சாதிவாரி கணக்கெடுப்பு மற்றும் பொருளாதார கணக்கெடுப்பு, அரசியலமைப்பு மற்றும் குடிமக்களின் உரிமைகளைப் பாதுகாப்பது போன்ற உத்தரவாதங்களை காங்கிரசும், இந்தியா கூட்டணியும் வழங்கி உள்ளன.
அதேநேரம் பா.ஜ.க.வோ, வேலையில்லா திண்டாட்டம் உறுதி, விவசாயிகளுக்கு கடன் சுமை, பாதுகாப்பு மற்றும் உரிமைகள் அற்ற பெண்கள், உதவியற்ற தொழிலாளர்கள், அடித்தட்டு மக்களின் பாகுபாடு மற்றும் சுரண்டல், சர்வாதிகாரம், போலி ஜனநாயகம் போன்றவற்றைத்தான் அர்த்தப்படுத்துகிறது.
நாட்டின் குடிமக்களாகிய உங்களது எதிர்காலம் உங்கள் கைகளில் இருக்கிறது. எனவே வாக்களிப்பதற்கு முன்பு நன்கு சிந்தித்து புரிந்து கொண்டு பிறகு சரியான முடிவை எடுங்கள்" என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.