நீதிமன்ற உத்தரவு - கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத் துறை 6ஆவது முறை சம்மன்!
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத் துறையின் மூலம் ஆறாவது முறையாக விசாரணை அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.
டெல்லி மாநில அரசின் மதுக்கொள்கை முறைகேட்டுப் புகார் தொடர்பாக விசாரிப்பதற்கு வரும் 17ஆம் தேதியன்று அமலாக்கத் துறை அலுவலகத்தில் அவர் முன்னிலையாக வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் அனுப்பப்பட்ட 5 அழைப்பாணைகளையும் ஏற்க அரவிந்த் கெஜ்ரிவால் மறுத்துவிட்டார். தன்னை தேர்தல் பிரச்சாரம் செய்யவிடாமல் தடுப்பதற்காகவே, அரசியல் நோக்கத்துக்காக விசாரணை என இழுத்தடிக்க சதி நடப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார். இதுகுறித்து அமலாக்கத் துறைக்கு கெஜ்ரிவால் கடிதம் ஒன்றையும் அனுப்பி, தன்னை அழைப்பது சட்டவிரோதம் என்று குறிப்பிட்டிருந்தார்.
அதைத் தொடர்ந்து, அமலாக்கத் துறையின் சார்பில் டெல்லி நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. அதை விசாரித்த நீதிமன்றம், கெஜ்ரிவாலுக்கு அழைப்பாணை அனுப்பலாம் எனத் தெரிவித்தது.
நீதிமன்ற உத்தரவை அடுத்து, கெஜ்ரிவாலை வரும் 17ஆம்தேதி விசாரணைக்கு வர அமலாக்கத் துறை ஆணையிட்டுள்ளது.