மனைவி பிறந்தநாளுக்கு நிலவில் இடம் வாங்கி பரிசளித்த கணவர்!
நிலவிலும் மற்ற கிரகங்களிலும் நிலம் வாங்குவது நீண்ட காலத்துக்கு முன்பே தொடங்கிவிட்டது என்றாலும், மனைவிக்கு கொடுக்கப்பட்ட வாக்குறுதியை நிறைவேற்றுவதற்காக சாமானியர் ஒருவர் நிலவில் இடம் வாங்கியிருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது.
மேற்குவங்க மாநிலம் ஜார்கிராம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சஞ்சய் மஹதோ. இவர் அனுமிகா என்பவரை காதலித்து வந்த நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் திருமணம் செய்துகொண்டுள்ளார். தன்னுடைய காதல் மனைவிக்கு நிலவைப் பரிசளிப்பதாக சஞ்சய் திருமணத்துக்கு முன்பே உறுதியளித்திருக்கிறார். உடனே அதை சஞ்சயால் நிறைவேற்ற முடியவில்லை.
இதற்கிடையே, சந்திரயான்-3 வெற்றி, அவருடைய ஆசையை தூண்டியிருக்கிறது. நண்பர்களின் உதவியுடன், லூனா சொசைட்டி இன்டர்நேஷனல் மூலம் நிலவில் ரூ. 10ஆயிரத்துக்கு இடத்தை வாங்கியுள்ளார். இடம் வாங்கிய ஆவணத்தை, மனைவியின் பிறந்தநாளன்று அவருக்கு பரிசாக கொடுத்துள்ளார். இதற்காக, ஏறக்குறைய ஒரு வருடகாலம் சஞ்சய் அலைந்து திரிந்திருக்கிறார்.
சந்திராயன் -3 வெற்றிக்கு முன்னரே மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் உள்ளிட்ட பலர் நிலவில் இடத்தை வாங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.