2025ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் ‘தகைசால் தமிழர்’ விருது இந்திய யூனியன் முஸ்லீம் கட்சியின் தேசிய தலைவர் கே.எம். காதர் மொகிதீனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. சுதந்திர தின விழாவில் முதல்வர் ஸ்டாலின் விருதினை வழங்கவுள்ளார்.
இது தொடர்பாக அரசு விடுத்துள்ள செய்திக் குறிப்பில், "தமிழ்நாட்டுக்கும், தமிழினத்தின் வளர்ச்சிக்கும் மாபெரும் பங்காற்றியவர்களைப் பெருமைப்படுத்தும் வகையில் "தகைசால் தமிழர்" என்ற பெயரில் புதிய விருது 2021ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான விருதாளரை தேர்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட குழுவின் கலந்தாலோசனைக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.
அக்கூட்டத்தில், மூத்த அரசியல் தலைவரும் கலைஞரின் அன்புக்குரியவருமான பெரியவர். மணிச்சுடர் இதழின் ஆசிரியரும் இந்திய அரசியல் பற்றிய ஆழமான புரிதலுடன், சமூக நல்லிணக்கத்துக்காக தன் வாழ்நாளெல்லாம் உழைத்துவரும் பேராசியர் கே.எம். காதர் மொகிதீன் அவர்களை பெருமைப்படுத்தும் வகையில் இந்த ஆண்டிற்கான தகைசால் தமிழர் விருதுக்கு அவரது பெயர் பரிசீலிக்கப்பட்டு அவருக்கு இவ்விருதினை வழங்க முடிவு செய்யப்பட்டது.
பேராசிரியர் காதர் மொகிதீன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் தலைவர் ஆவார். தமிழ்நாட்டில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கியன் தேசியப் பொதுச் செயலாளரும், தமிழ் மாநிலத் தலைவராகவும் இருந்தவர். மனித நேய மாண்பாளர், பழகுவதற்கு இனிய பண்பாளர், அறிவார்ந்த சொற்பொழிவாளர் மனிதநேயத்துக்கும் மதநல்லிணக்கத்துக்கும் தம்மை அர்ப்பணித்துக் கொண்டவர்.
கோவையில் 2010ஆம் ஆண்டு நடைபெற்ற உலகத் தமிழச் செம்மொழி மாநாட்டில் தமிழ்நாட்டிற்கும், அரபகத்துக்கும் உள்ள தொடர்புகள் பற்றிய ஆய்வுக் கட்டுரை வழங்கியவர். 8 ஆண்டுகள் தொடர்ந்து தாருல் குர்ஆன் இதழில் ’தமிழர்க்கு இஸ்லாம் வந்த மதமா?’ எனும் தலைப்பில் தொடர் கட்டுரை எழுதியவர். வாழும் நெறி குர்ஆனின் குரல். இஸ்லாமிய இறைக்கோட்பாடு உட்பட 6 நால்களை எழுதியவர். மேலும், திருச்சி ஜமால் முகம்மது கல்லூரியில் 15 ஆண்டுகள் வரலாற்றுத்துறைப் பேராசியரியராகப் பணியாற்றியவர். காயிதே மில்லத் காலம் முதல் தொடர்து சமூக நல்லிணக்கம் பரப்பி வரும் சிந்தனையாளர். பல பட்டதாரிகளை உருவாக்கி அவர்களின் வாழ்வினை உயரத்துக்கு உயர்த்திய ஆசானும் ஆவார்.
"தகைசால் தமிழர்" விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டகே.எம். காதர் மொகிதீனுக்கு, ரூ.10 லட்சத்துக்கான காசோலை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் ஆகியவை ஆகஸ்ட் 15ஆம் தேதி நடைபெறும் சுதந்திர தின விழாவில் முதல்வர் ஸ்டாலினால் வழங்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.