காஷ்மீர் பயங்கரம்: இதுதான் காரணமா? - பாகிஸ்தான் விளக்கம்!

பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா ஆசிப்
பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா ஆசிப்
Published on

காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலுக்கும் தங்களுக்கும் தொடர்பில்லை என்று பாகிஸ்தான் அரசு விளக்கம் அளித்துள்ளது.

காஷ்மீரின் முக்கிய சுற்றுலாத் தலமான பஹல்காம் என்ற இடத்தில் நேற்று பயங்கரவாதிகள் சுற்றுலாப் பயணிகளை குறி வைத்து திடீர் தாக்குதல் நடத்தினார்கள்.

இந்த பயங்கரவாதிகளின் தாக்குதலில் மொத்தம் 28 பேர் பரிதாபமாக பலியாகினர். இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் ஒமர் அப்துல்லா மற்றும் அதிகாரிகளுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை நடத்தி வருகிறார்.

இந்த தாக்குதலுக்கு லஷ்கர்-இ-தொய்பா-வின் ஒரு பிரிவாக சொல்லப்படும் 'தி ரெசிஸ்டன்ஸ் ஃபிரண்ட்' அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்த தாக்குதல் தொடர்பாக மத்திய அரசு இதுவரை எவ்வித அதிகாரப்பூர்வ தகவலையும் வெளியிடவில்லை.

இந்நிலையில், காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலுக்கும் தங்களுக்கும் தொடர்பில்லை என்று பாகிஸ்தான் அரசு விளக்கம் அளித்துள்ளது. இதுதொடர்பாக அந்நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா ஆசிப் கூறுகையில், "பாகிஸ்தானுக்கு இந்த சம்பவத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. நாங்கள் பயங்கரவாதத்தை ஆதரித்ததில்லை, எனவே இதற்கு பாகிஸ்தானைக் குறை கூற வேண்டாம்.

இந்தியாவிற்கு எதிராக பல்வேறு மாநிலங்கள் கிளர்ச்சிகள் உள்ளன. ஒன்றல்ல, இரண்டல்ல, டஜன் கணக்கானவை. நாகாலாந்து முதல் காஷ்மீர் வரையிலும். சத்தீஸ்கர், மணிப்பூர் மற்றும் தெற்கிலும் இந்த கிளர்ச்சிகள் உள்ளன.

இஸ்லாமியர்களை, கிறிஸ்தவர்களை, பவுத்தர்களை இந்துத்துவ சக்திகள் ஒடுக்குகின்றனர். இது அதற்கு எதிரான கிளர்ச்சி. இதன் காரணமாகவே இதுபோன்ற நடவடிக்கைகள் அங்கு நடக்கின்றன" என்று அவர் தெரிவித்துள்ளார்.

தாக்குதலில் ஏற்பட்ட உயிர் இழப்பு குறித்து பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் அறிக்கையை வெளியிட்டநிலையில், அதை பயங்கரவாதச் செயல் என்று விவரிக்கவோ, கண்டிக்கவோ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

logo
Andhimazhai
www.andhimazhai.com