மு.க.ஸ்டாலினுக்கு வீரமணி சொல்லும் புது அறிவுரை!

திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி
திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி
Published on

தமிழ்நாட்டில் பல மாதங்களாக ஆங்காங்கே புதிய புதிய சாதிப் பிரச்னைகள் ஏற்பட்டுவருகின்றன. சில இடங்களில் உயிரிழப்புவரை விவகாரங்கள் பெரிதாகின்றன. இதைத் தடுக்க காவல்துறையில் இதற்கென தனி உளவுப் பிரிவை உருவாக்க வேண்டும் என்று ஏற்கெனவே வி.சி.க., இடதுசாரி கட்சிகள் உட்பட பல அமைப்புகள் கோரிவருகின்றன.

அதைத் தொடர்ந்து, தி.க. தலைவர் வீரமணியும் இதே கோரிக்கையை வலியுறுத்தியுள்ளார்.

இன்றைய அறிக்கை ஒன்றில் அவர் இதைப் பற்றி அழுத்தமாகக் கருத்து தெரிவித்துள்ளார்.

அந்த அறிக்கை விவரம்:

”மதக் கலவரத்தையும், ஜாதிக் கலவரத்தையும் தூண்டிவிட்டு, அரசியல் ஆதாயம் தேடிட ஒரு மதவெறிக் கூட்டம் – தி.மு.க.வின் பெருமைமிகு ‘திராவிட மாடல்’ ஆட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்த அங்கொன்றும், இங்கொன்றும் நடக்கும் சில மோதல்களைப் பெரும் ஜாதிக் கலவரம் போல் சித்திரிப்பது, அதை ஆளுநராக உள்ள ஆர்.எஸ்.எஸ்.காரர் பூதக் கண்ணாடியால் பெருக்கி, தங்கள் வயப்பட்ட ஊடக வெளிச்சத்தில் நின்று குற்றச்சாற்றுப் பட்டியலைத் தயார்படுத்தி தி.மு.க.மீதும், நல்லாட்சி நாயகரான நமது முதலமைச்சர், அவரது ஆட்சியின்மீதும் அவதூறுச் சேற்றையும் வாரி இறைப்பது அன்றாட வழமையாகி வருகிறது!

சில குறிப்பிட்ட நாளேடுகள், வார ஏடுகள் ஒருபுறம் அவதூறு, ஆதாரமற்ற செய்திகளைப் பரப்புவதும், ‘‘கருவாடு விற்ற காசு நாறாது; நாய் விற்ற காசு குரைக்காது’’ என்ற பழமொழிகளை நினைவூட்டும் வண்ணம் விளம்பரங்களை அமைச்சர்கள், ஆளுங்கட்சி மாவட்டச் செயலாளர்களிடம் இருந்து வாங்கி, தங்களது கஜனாக்களை நிரப்பிக் கொள்ளும் வெட்கக்கேடு எல்லாம் சகஜமாக நடைபெறும் அவலம்!

எங்காவது துரும்பு கிடைத்தால் அதைப் பெரிதுபடுத்தி (magnify), ஊதி உப்பச் செய்து, ஊர்வலம் விட வாய்ப்புக் கிடைக்காதா என்று பேசுவது; பொறுப்பற்றுப் புளுகும் நெறிெகட்டவர்களுக்கு பெரும் அரசியல் விற்பன்னர்கள்கூட விளம்பர வெளிச்சம் தருவது!
இத்தியாதி! இத்தியாதி!!

தமிழ்நாட்டில் உள்ள புதுக்கோட்டையிலிருந்துப் புறப்படும் செய்திகள், அங்கே ஜாதிவெறி கோர நர்த்தனம் ஆடுவதுபோல சித்தரிக்கப்படும் செய்தி ஊடக வெடிப்புகள் நாளும் புதுப்புதுச் செய்திகளாகி, வெறும் வாயை மெல்பவர்களுக்கு ‘அவல்’ கிடைத்ததைப்போல ஒரு வாய்ப்பை ஏற்படுத்தித் தருவது விந்தையாகவும், விஷமத்தனமான ஒன்றாகவும் உள்ளது!

முன்னர் தண்ணீர் தொட்டியில் அசுத்தப்படுத்தியது கொடுமை!
அடுத்து இப்போது வடகாடு என்ற ஊரில், கோவில் திருவிழாவிலும் இடப்பிரச்சினை காரணமாகவும் ஒடுக்கப்பட்ட மக்களின் இருகூறாகிய எஸ்.சி., மற்றும் எம்.பி.சி., மக்களிடையே கலவரம். எஸ்.சி., மக்கள் மற்ற பிற்படுத்தப்பட்டவர்களால் தாக்கப்பட்டு, பலர் காயமுற்றனர் என்று வரும் செய்திகள்!


முதலமைச்சர் இந்த மாவட்டத்தில் கூடுதலாக காவல்துறை அதிகாரிகள், நுண்ணறிவுப் பிரிவு உள்பட தனியே அமைத்து, எந்த ஜாதியினராயினும் தவறு, கலவரம் செய்யக் காரணமானவர்கள்மீது முளையிலேயே கடும் நடவடிக்கை எடுத்து, சமூகநீதிக்குப் புறம்பாக இரண்டு கைகளும் ஒன்றை ஒன்று தாக்கிக் கொள்ளும் வன்கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும்.

இவ்வாட்சி எச்சார்பும் இல்லாத நியாயத்தின் பக்கம் நிற்கும் அரசு என்ற பேருண்மையை நிலைநாட்ட உரிய செயல்திட்டமும், மீண்டும் வன்முறை ஏற்படாத வண்ணம் இரும்புக்கரம் கொண்டு விரைந்த கடும் நடவடிக்கைகளும் தேவை!

குறிப்பிட்ட மாவட்டம், அங்கேயே குறிப்பிட்ட இதுபோன்ற ஜாதி – தீண்டாமை மோதல்கள்; இவற்றிற்கு யார் மூலகாரண கர்த்தாக்கள் என்பதைக் கண்டறிந்து, இதை வரும் தேர்தல் பிரச்சாரச் சரக்காக சில எதிர்க்கட்சியினர் பயன்படுத்தாத வகையில், காலதாமதமற்ற கடும் நடவடிக்கை அவசரத் தேவையாகும்!

திருப்பரங்குன்றத்தில் முயன்று தோற்ற பா.ஜ.க., ஹிந்து முன்னணியினர்; மதுரை ஆதீனகர்த்தர் போன்ற அரைவேக்காடுகள் மதக்கலவரத்தைத் தூண்ட முயற்சிக்கின்றனர். தன்னை ஏதோ கொலை செய்ய முயற்சி (விபத்து) என்று ‘புரூடா’ விட்டு ஹீரோவாக முயன்று தோற்றுள்ளார். அவரது ஓட்டுநர்மீது வழக்கு!  ஆனால், மதுரை ஆதீனகர்த்தர்மீது  பொய்ப் புரட்டு, புரளிக்குரிய குற்றவாளி என்று நியாயமாக நடவடிக்கை எடுக்க அரசு ஏன் தயங்குகிறது என்று நமக்குப் புரியவில்லை.

இப்படி, எங்கும் கலவரத்தைத் தூண்ட சிலர் முயற்சிக்கும் சூழலில், புதுக்கோட்டை மாவட்டத்தின் இந்த விசித்திர நிகழ்வுகளுக்கு – தமிழ்நாட்டின் ‘திராவிட மாடல்’ ஆட்சி ஒரு புதிய அணுகுமுறையைத் தொடங்கி காலதாமதமோ, தயக்கமோ இன்றிக் கையாண்டு, தமிழ்நாடு என்றுமே அமைதிப்பூங்கா, ஜாதி, மதக் கலவரங்களுக்குத் துளியும் இடந்தராத ‘திராவிட – பெரியார் மண்’ என்பதை மனிதநேயத்திற்கும், மாண்புக்கும் உரிய இவ்வாட்சி தனது செயல்மூலம் காட்ட முன்வரவேண்டும்.

தி.மு.க. கூட்டணி கொள்கைக் கூட்டணி என்பதை இம்மாதிரி சில்லறை விஷமங்களைக் கொண்டு ‘உடைக்கும் உத்தியோ’ என்ற அய்யமும் ஏற்படவே செய்கிறது! அவசர நடவடிக்கைத் தேவை!” என்று கி.வீரமணி கூறியுள்ளார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com