77 லட்சத்தை தாண்டிய உறுப்பினர் சேர்க்கை: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்..!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
Published on

ஓரணியில் தமிழ்நாடு இயக்கம் மூலம் திமுகவில் புதிதாக 77 லட்சம் பேர் இணைந்துள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 'உடன்பிறப்பே வா' என்ற தலைப்பில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் சட்டமன்றத் தொகுதி வாரியாக நிர்வாகிகளை ஒவ்வொருவராக நேருக்கு நேர் சந்தித்து ஆலோசனைகள் வழங்கி வருகிறார்.

அந்த வகையில், இன்றைய 'உடன்பிறப்பே வா' கூட்டத்தில் திமுக நிர்வாகிகள் இடையே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

மக்களின் ஆதரவு பெருகப் பெருக பொறுப்பும், கடமையும் கூடுகிறது. எதிர்பார்ப்பு அதிகமாகிறது. அதனைக் காப்பாற்ற நாம் அனைவரும் கடினமாக உழைத்தாக வேண்டும். அதிகமாக உழைக்க நான் தயாராக இருக்கிறேன். அனைவரும் அயராது பாடுபட வேண்டும். வெற்றியை ஈட்ட அயராது பாடுபட வேண்டும்.

இடையூறுகள், அவதூறுகள் எதுவாயினும் அவற்றை முறியடித்து கடக்கும் வலிமை கொண்டது பொதுமக்களின் அரசாக திராவிட மாடல் அரசு திகழ்ந்து வருகிறது. வளர்ச்சி என்பது என்னால் மட்டும் ஆனதல்ல; உங்கள் ஒவ்வொருவரின் ஆக்கப்பூர்வமான நடவடிக்கையால் வளர்ந்து வருகிறது. திமுக. ஓரணியில் தமிழ்நாடு இயக்கம் மூலம் திமுகவில் புதிதாக 77 லட்சம் பேர் இணைந்துள்ளனர்.

தமிழ்நாட்டுக்கான திட்டங்களைப் புறக்கணித்து, தமிழ்ப் பண்பாட்டின் பெருமையை நிராகரித்து, தமிழ் மொழி வளர்ச்சிக்கு நிதி வழங்காமல் வஞ்சித்து, தமிழ்நாட்டு மக்களிடையே மதவாதப் பிரிவினையை உருவாக்க நினைப்பவர்களுக்கும், அவர்களுக்குத் துணைபோகிற துரோகிகளுக்கும் தமிழ்நாட்டில் இடமில்லை என்பதை மக்கள் உறுதி செய்யும் வகையில் 'ஓரணியில் தமிழ்நாடு' முன்னெடுக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com