பல்கலைக்கழகங்களில் மேற்கொள்ளவேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள், மாணவர்களின் பாதுகாப்பிற்கு மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், பல்கலைக்கழகங்களின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் தலைமையில் நேற்று நாமக்கல் கவிஞர் மாளிகையில் நேற்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் உயர்கல்வித் துறை அமைச்சர் பேசியது:
“இந்திய அளவில் உயர்கல்வியில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக விளங்கும் வகையில் சீரிய திட்டங்களை வழங்கி செயல்படுத்தி வருகிறார்கள். மாணவர்களின் கல்வித்தரம் உயர வேண்டும்; மாணவர்கள் கல்வி கற்க பொருளாதாரம் ஒரு தடையாக இருக்கக் கூடாது என்பதைக் கருத்தில்கொண்டு புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன், நான் முதல்வன் போன்ற திட்டங்களைச் செயல்படுத்திவருகிறார்கள்.
இந்திய அளவில் மட்டுமல்லாது தமிழ்நாட்டை உலக அளவில் உயர்கல்வியில் சிறந்த முதன்மை மாநிலமாக உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் உயர்கல்வித் துறை சார்பில் பல்வேறு முன்னெடுப்புகள் செய்யப்பட்டு வருகின்றன.
அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த விரும்பத்தகாத சம்பவத்தில் முதலமைச்சரின் உத்தரவின் பேரில் துரித நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இது போன்ற சம்பவங்கள் எந்தவொரு கல்வி நிறுவனத்திலும், நிகழாமல் இருப்பதை உறுதிசெய்யும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. கல்வி நிறுவனங்களில் இரவு நேரங்களில் அனைத்து பகுதிகளிலும் மின்விளக்குகள், காண்காணிப்பு கேமராக்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
குறிப்பாக, கூர்நோக்குப் பகுதிகள் கண்டறியப்பட்டு அங்கு மின்விளக்குகள், கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட வேண்டும். கல்வி நிறுவன வாளகத்திற்குள் உள்நுழைபவர்கள், வெளியே செல்பவர்களின் தகவல்கள் பதிவேட்டில் பராமரிக்கப்பட வேண்டும். வளாகத்திற்குள் கண்டிப்பாக மாணவர்கள் பேராசியர்கள், பணியாளர்கள் அனைவரும் அடையாள அட்டை அணிந்திருக்க வேண்டும்.
அவசர காலங்களில் உதவும் வகையில் தமிழ்நாடு காவல் துறையால் உருவாக்கப்பட்டுள்ள ’காவல் உதவி’ செயலியின் பயன்பாடு குறித்து மாணவ மாணவிகளுக்கு எடுத்துரைக்க வேண்டும். கல்வி நிறுவனங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள பாதுகாப்பு அலுவலர்கள் இரவு நேரங்களில் தொடர் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும், பாதுகாப்பு நடவடிக்கைகளில் மாணவ மாணவிகளின் ஆலோசனையினையும் பெற்று அவற்றை செயல்படுத்த வேண்டும் உட்பட்ட பல்வேறு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.” என்று அமைச்சர் செழியன் கூறினார்.
இக்கூட்டத்தில் நான் முதல்வன், புதுமைப் பெண் மற்றும் தமிழ்ப் புதல்வன் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்துவது, பல்கலைக்கழகங்கள், இணைவுபெற்ற கல்லூரி வளாகங்களில் வளாகப் பாதுகாப்பு, மாணவர்களின் பாதுகாப்பிற்கு மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள், ஆராய்ச்சி மாணவர்களுக்கு வாய்மொழித் தேர்வு, பிற நடைமுறைகளை சரியான நேரத்தில் நடத்துதல், மாணவர்கள், ஆராய்ச்சி மாணவர்களிடமிருந்து பெறப்படும் புகார்களுக்கு உடனுக்குடன் நடவடிக்கை எடுத்தல், உதவி மையம் / உள் புகார் குழுவின் நடவடிக்கைகள், மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்புப் படிப்புகள், மின் ஆளுமை தொடர்பான முன்னெடுப்புகள், இடைநிற்றல் சதவீதத்தின் பகுப்பாய்வு உட்பட்ட பல்வேறு நடவடிக்கை குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டது.
உயர்கல்வித் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் கே. கோபால், கல்லூரிக் கல்வி இயக்கக ஆணையர் எ. சுந்தரவள்ளி, உயர்கல்வித் துறை இணைச் செயலாளர் துரை. ரவிச்சந்திரன், பல்கலைக்கழகங்களின் பதிவாளர்கள், இணை இயக்குநர்கள் உட்பட்ட அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.