பாஜக ஆளும் மாநிலத்திலும் மும்மொழி கொள்கைக்கு எதிர்ப்பு!

பாஜக ஆளும் மாநிலத்திலும் மும்மொழி கொள்கைக்கு எதிர்ப்பு!
Published on

மகாராஷ்டிரத்தில் பள்ளிகளில் 3 ஆவது மொழியாக இந்தி சேர்க்கப்பட்டுள்ளதற்கு அந்த மாநில மொழி ஆலோசனைக் குழு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

மகாராஷ்டிரத்தில் தேசிய கல்விக் கொள்கை 2020-இன் கீழ், மராத்தி மற்றும் ஆங்கில வழிக் கல்வி பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை மூன்றாவது மொழிப் பாடமாக இந்தி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

சிவசேனை(யுபிடி) கட்சி, தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் 3 ஆவது மொழியாக இந்தி மொழி சேர்க்கப்பட்டுள்ளது கல்விரீதியாக நியாயமற்றது என்றும் இது மாணவர்களின் உளவியல் நலனுக்கு ஏற்றது அல்ல என்றும் மகாராஷ்டிர மாநில மொழி ஆலோசனைக் குழு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக முதல்வர் தேவேந்திர பட்னவீஸுக்கு மொழி ஆலோசனைக் குழு நேற்று எழுதியுள்ள கடிதத்தில் "மகாராஷ்டிரத்தில் கல்வியில் இந்தியைத் திணிப்பது மாநிலத்தின் பின்னடைவுக்கு வழிவகுக்கும். கல்வி ரீதியாக இது நியாயப்படுத்தப்படவில்லை. இது அறிவியல் ரீதியானதும் அல்ல. மேலும் மாணவ, மாணவிகளை உளவியல் ரீதியாக பாதிக்கும், அவர்களுக்கு தேவையற்ற மன அழுத்தத்தை ஏற்படுத்தும்.

எனவே, மகாராஷ்டிரத்தில் 12 ஆம் வகுப்பு வரையிலும் மராத்தி, ஆங்கிலம் என இருமொழிக் கொள்கை மட்டும் இருக்க வேண்டும். மாநில கல்வித் துறை இதுதொடர்பாக முடிவு எடுப்பதற்கு முன்னதாக எங்களுடன் ஆலோசித்திருக்க வேண்டும். எங்களிடம் மொழிசார்ந்த பல்வேறு நிபுணர்கள் இருக்கின்றனர்" என்று குறிப்பிட்டுள்ளது.

மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கை மற்றும் மும்மொழிக்கொள்கைக்கு தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டைத் தொடர்ந்து மகாராஷ்டிரத்திலும் இந்திக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com