போஸ்கோ கைது
போஸ்கோ கைது

இப்படியும்... +1 மாணவனுடன் 27 வயது பெண் வல்லுறவு; போஸ்கோவில் கைது!

பெரும்பாலான பாலியல் துன்புறுத்தல்கள் சிறு வயது பெண் குழந்தைகள் மீதே நிகழ்த்தப்பட்டு வரும் நிலையில், பதினொன்றாம் வகுப்பு மாணவனுடன் 27 வயது பெண் ஒருவர் வல்லுறவு கொண்டுள்ளார். சிறார் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் நிகழ்ந்துள்ளது. பதினாறு வயதான அந்த மாணவன், பதினொன்றாம் வகுப்பு படித்துவருகிறான். பக்கத்து வீட்டில் தன் மூன்று பிள்ளைகளுடன் 27 வயது பெண் வசித்துவருகிறார். குறிப்பிட்ட மாணவனும் அந்தப் பெண்ணும் உறவினர்கள் என்பதால், அந்தப் பையன் பெண்ணின் வீட்டுக்கு இயல்பாகச் சென்றுவந்தபடி இருந்துள்ளான்.

இந்த நிலையில், திடீரென அந்த மாணவன் உடல்நிலை பாதிக்கப்பட்டான். எப்போதும் போல இயல்பாக இல்லாமல் யாருடனும் அவன் சரிவரப் பேசாதபடியும் இருந்தான். பையனின் நடத்தையில் சந்தேகம் அடைந்த பெற்றோர், அவனிடம் தீவிரமாக விசாரித்தனர். அப்போதுதான், அவன் பக்கத்து வீட்டு உறவினர் பெண் தன்னுடன் வல்லுறவு வைத்துக்கொண்டதாகக் கூறியிருக்கிறான்.

அதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர், மானாமதுரை காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்படி, சிறார் மீதான பாலியல் குற்றச் சட்டப் பிரிவின் கீழ் அந்தப் பெண் மீது வழக்கு பதிந்து, அவரைக் கைதுசெய்தனர். அவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

logo
Andhimazhai
www.andhimazhai.com